ஜடேஜா - தோனி போராட்டம்
2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி ஜூலை 9 அன்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா சேஸிங்கில் சொதப்பியது. ஜடேஜா - தோனி கடைசி சில ஓவர்கள் வரை போட்டியை எடுத்துச் சென்று போராடினர்.
சிக்ஸர் அடித்தார்
ஜடேஜா ஆட்டமிழந்த நிலையில், 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா ஆடி வந்தது. அப்போது தோனி 49வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி நம்பிக்கை அளித்தார்.
ரன் அவுட் ஆனார்
ஆனால், அதே ஓவரின் மூன்றாம் பந்தில் இரண்டு ரன் ஓடிய அவர் எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆனார். வெறும் இரண்டு இன்ச்களில் அவர் ரன் அவுட் ஆனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலகக்கோப்பை கனவு தகர்ந்தது
நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் பீல்டிங் செய்து எறிந்த பந்து, நேரடியாக ஸ்டம்புகளை தகர்த்து தோனியை ரன் அவுட் செய்தது. அத்துடன் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது.
மார்ட்டின் கப்தில் செயல்
ஒருவேளை மார்ட்டின் கப்தில் அன்று அத்தனை நீண்ட தூரத்தில் இருந்து நேரடியாக ஸ்டம்பில் அடிக்காமல் போயிருந்தால், தோனி அவுட் ஆகி இருக்க மாட்டார். எல்லாமே தலை கீழாக மாறி இருக்கும்.
டைவ் அடித்து இருந்தால்…
அதே சமயம், தோனி ரன் ஓடிய போது, கிரீஸை அருகே டைவ் அடித்து இருந்தால் ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அதை எண்ணித் தான் தோனி வருத்தத்தில் இருக்கிறார்.
தோனி வருத்தம்
அது பற்றி தோனி கூறுகையில், "எனக்கு நானே கூறிக் கொள்கிறேன். ஏன் நான் டைவ் அடிக்கவில்லை. அந்த இரண்டு இன்ச்கள் பற்றி எனக்கு நானே தொடர்ந்து சொல்லிக் கொள்கிறேன். "தோனி.. நீ டைவ் செய்து இருக்க வேண்டும்"" என்றார்.
தோல்வி தந்த வலி
மூத்த வீரரான தோனி களத்தில் என்ன நடந்தாலும் நிதானம் தவறாமல் இருப்பவர் என்பதால் "கேப்டன் கூல்" என அறியப்பட்டவர். அவராலேயே தோல்வி தந்த வலியில் இருந்து மீள முடியாதது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீண்ட விடுப்பு
மேலும், அந்த தோல்விக்குப் பின் தோனி இந்திய அணியில் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவர் நீண்ட விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், அவர் ஐபிஎல் தொடரில் ஆட உள்ளார்.
ஐபிஎல்-இல் ஆடுவார்
ஐபிஎல் தொடருக்குப் பின் அவர் இந்திய டி20 அணிக்கு திரும்ப அதிக வாய்ப்பு உள்ளது. தோனி ஒருநாள் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்ற பேச்சும் உள்ளது குறிப்பிடத்தக்கது.