2019 உலகக்கோப்பை
2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் தோனி கடைசி வரை போராடி ரன் அவுட் ஆனார். அதுவே அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி. அதன் பின் தோனி கடந்த ஓராண்டாக எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.
தோனி ஓய்வு அறிவிப்பு
இந்த நிலையில் அவர் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்ய சென்னை வந்த போது தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது தோனி ரசிகர்கள் பலரும் அவருக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ரசிகர்கள் கோரிக்கை
இந்திய அணியின் உடையில் தோனி கடைசியாக ஒரு போட்டியில் ஆடுவதை காண வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், அதற்கு சாத்தியம் இல்லை. தோனியை உரிய மரியாதையுடன் பிசிசிஐ ஓய்வு பெறச் செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.
மைதானத்தில் தான் ஓய்வு பெற வேண்டும்
தோனி போன்ற பெரும் ரசிகர் கூட்டம் கொண்ட ஒருவர் ரசிகர்கள் முன்னிலையில், மைதானத்தில் தான் ஓய்வு பெற வேண்டும் என சிலர் கூறினர். அதே போன்ற ஒரு விமர்சனத்தை தான் முன் வைத்துள்ளார் சக்லைன் முஷ்டாக்.
பிசிசிஐக்கு தோல்வி
இது குறித்து சக்லைன் முஷ்டாக் கூறியதாவது - "நான் எப்போதும் நல்ல விஷயங்களையே பேச வேண்டும், எதிர்மறை எண்ணங்களை பரப்பக் கூடாது என நினைக்கிறேன். ஆனாலும், இதை சொல்லியே ஆக வேண்டும் என தோன்றுகிறது. இது பிசிசிஐக்கு ஒரு வகையில் தோல்வி தான்."
இப்படி நடந்திருக்கக் கூடாது
"தோனி போன்ற பெரிய வீரரை அவர்கள் சரியான வழியில் நடத்தவில்லை. ஓய்வு இப்படி நடந்திருக்கக் கூடாது. இது என் இதயத்தில் இருந்து நேரடியாக வருகிறது. பல கோடி ரசிகர்களும் இதே போலவே எண்ணுவார்கள் என நினைக்கிறேன்"
காயம் அடைந்துள்ளேன்
"நான் இப்படி சொல்வதற்கு பிசிசிஐ என்னை மன்னிக்கட்டும். ஆனால், அவர்கள் தோனியை சரியாக நடத்தவில்லை. இந்த விஷயத்தில் நான் மிகவும் காயம் அடைந்துள்ளேன். அவர் ஓய்வு பெறும் முன் இந்திய உடையில் ஒரு முறை பார்த்திருக்க வேண்டும் என்பதே ஒரே வருத்தம்." இவ்வாறு கூறினார் சக்லைன் முஷ்டாக்.
ஃபேர்வெல் போட்டி
பிசிசிஐ ஃபேர்வெல் போட்டி நடத்த விரும்பினாலும் தோனி ஏற்றுக் கொள்வாரா? என்ற கேள்வியையும் சிலர் கேட்டு வருகின்றனர். ஆனால், தோனி தாமாக ஓய்வை அறிவிக்கும் நிலையை பிசிசிஐ ஏற்படுத்தியது எனவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தோனி கோப்பை பெற்றுக் கொடுப்பாரா?
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றாலும் தோனி 2020 ஐபிஎல் தொடரில் ஆட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு முறை தோனி கோப்பை பெற்றுக் கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.