கடைசி போட்டி
தோனி கடைசியாக 2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியில் ஆடி இருந்தார். அந்த போட்டி ஜூலை 10, 2019 அன்று நடந்தது. அதன் பின் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்திய அணியை விட்டு விலகியே இருந்த தோனி 2020 ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகி வந்தார்.
பயிற்சி
சென்னையில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தோனி வந்தார். ஆகஸ்ட் 15 அன்று பயிற்சி துவங்கிய நிலையில், தோனி அன்றைய தினம் இரவு 7.29 மணிக்கு இன்ஸ்டாகிராமில் தான் ஓய்வு பெறுவதாக சூசகமாக அறிவித்தார்.
ஓய்வு அறிவிப்பு
தோனி தன் பதிவில், "இத்தனை காலமும் நீங்கள் அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றிகள் பல. 1929 மணி முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள்"என கூறி இருந்தார். தோனி கூறிய 1929 மணி என்பது என்ன என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
அர்த்தம் என்ன?
தோனி சரியாக 7.29 மணிக்கு இன்ஸ்டாகிராமில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதை தான் அவ்வாறு கூறினார் என பலரும் கூறி வந்தனர். ஆனால், உண்மையில் அதன் அர்த்தம் இந்தியா - நியூசிலாந்து உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த அந்த நிமிடம் தான்.
அரை இறுதி
2019 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டி மழை காரணமாக இரண்டு நாட்கள் நடந்தது. ரிசர்வ் நாளான இரண்டாம் நாளில் தோனி இந்தியா சேஸிங்கின் போது விக்கெட்களை இழந்து தடுமாறியது. தோனி ரன் அவுட் ஆன போதே இந்திய அணியின் தோல்வி உறுதியானது. அந்தப் போட்டி சரியாக 7.29க்கு முடிவுக்கு வந்தது.
வதந்திகள்
தோனி அந்தப் போட்டியுடன் ஓய்வு பெறுவார் என அப்போதே கூறப்பட்டது. ஆனால், தோனி ஓய்வு அறிவிப்பை அப்போது வெளியிடவில்லை. தோனி ஓய்வு அறிவித்து விட்டார், அறிவிக்கப் போகிறார் என அதன் பின் பல முறை வதந்திகள் கிளம்பின.
தோனி ரசிகர்கள் ஆதரவு
வதந்திகள் கிளம்பிய போதெல்லாம் தோனி ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தோனி குறித்த பதிவுகளை வெளியிட்டு அதை டிரென்டிங் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். பலர் தோனி மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் என அவருக்கு ஆதரவாக கூறி வந்தனர்.
தோனி சூசகம்
இவை அனைத்தையும் தன் ஓய்வு அறிவிப்பில் சூசகமாக குறிப்பிட்டுள்ளார் தோனி. அவரது அறிவிப்பில் இந்தியா - நியூசிலாந்து அரை இறுதிப் போட்டி முடிந்த 7.29 மணி முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள் என்றே குறிப்பிட்டுள்ளார்.
அன்புக்கு நன்றி
அதே போல, இத்தனை காலமும் ரசிகர்கள் அளித்த அன்புக்கு நன்றி என அவர் கூறி உள்ளது அந்த நேரத்தில் இருந்து தனக்கு ரசிகர்கள் அளித்து வந்த அன்புக்கு நன்றி என்று கூறுவது போலவே அமைந்துள்ளது. இதைத் தான் தோனி குறிப்பிட்டுள்ளார் என அறிந்த ரசிகர்கள் சிலர் உருக்கமாக பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். தோனி வெளியிட்டுள்ள வீடியோவிலும் இறுதியில் உருக்கமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.