டெல்லி: ராணுவ பயிற்சியை முடித்துவிட்டு, தல தோனி டெல்லி திரும்பியதால் ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர்.
உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது. அந்த தருணத்திலிருந்து தோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரம் அடைந்தன.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்த பின்னர், தோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப் பட்டது. ஆனால் தோனியோ, துணை ராணுவ படைப் பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார்.
அதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ள வில்லை. இதையடுத்து, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் தோனி கடந்த மாதம் 31-ம் தேதி காஷ்மீர் சென்றார்.
அங்கு ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணிக்கு சென்ற தோனி ராணுவ பயிற்சியை முடித்தார்.
காஷ்மீரின் உரி, அனந்தநாக் பகுதிகளுக்கும் சென்று பணிகளை ஆற்றினார். இதையடுத்து அவர் தலைநகர் டெல்லி திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவ பயிற்சியை வெற்றிகரமாக தோனி முடித்து திரும்பி உள்ளதை அறிந்த ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர்.