கனவான பிளே ஆப் சுற்று
ஐபிஎல்லில் தொடர்ந்து 13வது வருடமாக விளையாடிவரும் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தன்னுடைய அணியை இதுவரை பிளே ஆப் சுற்றிற்கு அழைத்து செல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இந்த ஆண்டு அது வெறும் கனவாகவே மாறிப் போகும் நிலை உருவாகியுள்ளது.
ரசிகர்கள் ஆர்வம்
சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினால் என்ன.. தொடர்ந்து ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடுவார், அணியை வெற்றி பெற செய்வார் என்று ரசிகர்கள் வெகு ஆவலாக காத்திருந்தனர். ஆனால் எல்லாருடைய கனவிலும் மண்ணை வாரி போடும் செயலாகவே இருந்தது சிஎஸ்கேவின் ஆட்டம்.
தோனியின் 200வது போட்டி
ஐபிஎல்லின் முதல் போட்டியில் ரசிகர்களுக்கு சிறப்பான துவக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுத்த சிஎஸ்கே தொடர்ந்து சொதப்பல்களை பரிசாக அளித்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் தனது 200வது போட்டியை நேற்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்மூலம் பூர்த்தி செய்துள்ளார் தோனி.
ரசிகர்கள் ஏமாற்றம்
இதில் சிஎஸ்கே வெற்றி பெறும்... மீண்டும் மேலெழுந்து வரும், பிளே ஆப்பிற்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன்தான் டிவி பெட்டியின் முன்பு அமர்ந்தனர். ஆனால் அவர்களுக்கு இந்த சீசனில் தொடர்ந்து அளித்துவரும் ஏமாற்றத்தையே இந்த போட்டியிலும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் தோனி.
வெட்டி நியாயம்
அவர் சரியாக விளையாடாததை கூட ஏற்றுக் கொள்ள முடிந்த ரசிகர்களால், அவரது மோசமான கேப்டன்ஷிப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல், இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று அவர் வெட்டி நியாயம் பேசியதையும் ஏற்க முடியாமல் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தோனி ரசிகர்கள் திணறி வருகின்றனர்.