உலகக்கோப்பை வெற்றி
தோனி தலைமையிலான இந்திய அணி 1983 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் உலகக்கோப்பை வென்றது. 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா. அந்த வெற்றியால் புகழின் உச்சியை அடைந்தார் கேப்டன் தோனி.
சில நாட்கள் மட்டுமே..
ஆனால், எல்லாம் சில நாட்கள் தான். அதே 2011ஆம் ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அந்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது.
டெஸ்ட் தொடர் தோல்வி
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களை இந்திய அணி 0 - 4 என தோற்று இருந்தது. அதனால், தோனி கேப்டன்சி மீது விமர்சனம் எழுந்தது. அப்போதைய தேர்வுக் குழுவின் தலைவராக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருந்தார்.
தேர்வுக் குழு விவாதம்
மொஹிந்தர் அமர்நாத் போன்ற முன்னாள் வீரர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். மொஹிந்தர் அமர்நாத் தோனியை கேப்டன் பதவியில் இருந்தே நீக்க வேண்டும் என்றார். ஒரு கட்டத்தில் அது அடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் தோனியை அணியை விட்டே நீக்க வேண்டும் என்பது வரை போயுள்ளது.
டெஸ்ட் தோல்விகள்
அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. 2011க்கு முன்பு வரை இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளை குவித்து வந்தது. அதன் பின் தோல்விகள் குவிந்தன. அதற்கு திறமையான இளம் வீரர்கள் அணியில் இல்லாததே காரணம் என கூறப்பட்டது.
மோசமான பார்ம்
அப்போது நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தோனி கேப்டனாக தோற்றாலும், பேட்ஸ்மேன் ஆக 236 ரன்கள் எடுத்து அணியிலேயே அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார். ஆனால், அடுத்து நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தோனியின் சராசரி 20 மட்டுமே.
தோனியை நீக்க வேண்டும்
இதையடுத்து தான் தோனியின் கேப்டன்சியுடன், அணியில் இருந்தே நீக்க வேண்டும் என தேர்வுக் குழுவில் பேச்சு எழுந்துள்ளது. இதை அறிந்த அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன், தோனியை நீக்கும் பேச்சுக்கே இடம் இல்லை என அணித் தேர்வுக்கு முன்னதாக கூறி இருக்கிறார். குறிப்பாக, தோனிக்கு மாற்று வீரரை கூட தேர்வு செய்யாமல் எப்படி அவரை நீக்குவீர்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
கேப்டன் இல்லை
அதன் பின் நடந்த தேர்வுக் குழு கூட்டத்தில் தோனியை ஒருநாள் அணியில் தேர்வு செய்தாலும் இந்திய அணியின் கேப்டனை தேர்வு செய்யவில்லை. அதைப் பற்றிக் கேள்விப்பட்ட சீனிவாசன் கோல்ப் மைதானத்தில் இருந்து நேரடியாக கூட்டம் நடந்த இடத்திற்கே சென்று தேர்வுக் குழுவிடம் பேசி உள்ளார்.
சீனிவாசன் கேள்வி
2011 உலகக்கோப்பை வென்ற கேப்டனை அதே ஆண்டில் எப்படி ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்குவீர்கள்? என கேள்வி எழுப்பி இருக்கிறார் சீனிவாசன். அப்போது பிசிசிஐ தலைவர் ஒப்புதல் இல்லாமல் அணியில் மாற்றம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர்கள்
அப்போது சீனிவாசனால் தோனி கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொண்டார். பின்னர் அணியில் ஷிகர் தவான், அஸ்வின், ஜடேஜா போன்ற இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வலுப்படுத்தப்பட்டது. இந்தியா 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை தோனி தலைமையில் வென்று சாதித்தது.