முன்னாள் வீரரின் மலரும் நினைவுகள்
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விளையாட்டு அடையாளமாக மாறியுள்ள ஐபிஎல் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று அனைத்து தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கேவின் முன்னாள் இடதுகை ஸ்பின்னர் ஷதாப் ஜகாட்டி அந்த அணி குறித்தும் தோனி குறித்தும் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே
ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை சிஎஸ்கே கோப்பையை வென்றுள்ளது. முதல்முதலில் 2010ல்தான் கோப்பையை வென்றது சிஎஸ்கே. அதற்கு இறுதிப்போட்டியின்போது கேப்டன் தோனி போட்டுக்கொடுத்த வியூகம்தான் முக்கிய காரணம் என்று ஜகாட்டி தெரிவித்துள்ளார். இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ்
மும்பையின் டிஒய் படேல் மைதானத்தில் சிஎஸ்கே -மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இறுதிப்போட்டி நடைபெற்ற நிலையில், 169 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் சச்சின், சௌரப் திவாரி போன்றவர்கள் ஜகாட்டி ஓவரில் சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினர்.
தோனியின் வியூகம்
இதற்கு தோனியின் வியூகமே காரணம் என்று ஜகாட்டி தெரிவித்துள்ளார். சச்சின் போன்ற வலதுகை பேட்ஸ்மேன்கள், இடதுகை ஸ்பின்னர்களின் பௌலிங்கை எதிர்கொள்ள திணறுவார்கள் என்று அவர் கணக்கு போட்டு வைத்திருந்தார். அதற்கு தக்க தன்னை மிடில் ஆர்டரில் களமிறக்கி, சச்சினின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தி சிஎஸ்கே கோப்பையை வெல்ல காரணமாக இருந்ததாகவும் ஜகாட்டி தெரிவித்துள்ளார்.
தோனியின் தனித்திறமை
தொடர்ந்து பேசிய ஜகாட்டி, தோனி எப்போதுமே பௌலர்கள் கூட்டத்தில்கூட கலந்துகொள்ள மாட்டார் என்றும் கூறினார். பௌலர்கள் தங்களின் தனித்திறமை மற்றும் தைரியத்துடன் போட்டியின்போது செயல்பட வேண்டும் என தோனி நினைப்பார் என்றும் தெரிவித்துள்ளார். பௌலர்கள் சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும் என்று நினைக்கும் தோனி, அது சரியாக வரவில்லை என்றால் தன்னுடைய ஐடியாக்களை தருவார் என்றும் கூறியுள்ளார்.