சிறப்பான தொடக்கம்
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஹேசில்வுட் 4 ஓவர்கள் வீசி, 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிராவோ நான்கு ஓவர்கள் வீசி, 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓப்பனர்கள் டு பிளசிஸ், கெய்க்வாட் சற்று பொறுமையாக ஆட்டத்தை தொடங்கினார்கள். 3 ஓவர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் 12 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு இருவரும் கியரை மாற்றினர். 4வது ஓவரை வீசிய புவனேஷை 2 சிக்ஸர்கள் அடித்து வரவேற்றனர் டு பிளசிஸும், கெய்க்வாடும். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள். பிறகு ஹோல்டர் ஓவரில் 9 ரன்கள், ரஷீத் கான் வீசிய முதல் ஓவரில் 11 ரன்கள் என்று 6 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். எனினும், சிறப்பாக ஆடிவந்த ருதுராஜ் கெய்க்வாட் 38 பந்துகளில் 45 ரன்களில், ஹோல்டர் பந்துவீச்சில் கேட்ச்சானார். இதில், 4 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும்.
சின்ன தல ஏமாற்றம்
எனினும், டு பிளசிஸ் தனது வேகத்தை குறைக்கவே இல்லை. ஹைதரபாத் பவுலர்களின் தவறான பந்துகளை அவர் விட்டு விளாச தவறவில்லை. கெய்க்வாட் அவுட்டான பிறகு ரன் ரேட் சற்று குறைந்ததே தவிர, விக்கெட் விழாமல் மொயீன் அலி - டு பிளசிஸ் பார்ட்னர்ஷிப் பார்த்துக் கொண்டது. எனினும், ரஷீத் கான் ஓவரில், மொயீன் அலி போல்டாகி வெளியேறினார். பந்தை அவர் நன்றாக அடித்த போதிலும், அது அவரது காலில் பட்டு, ஸ்டெம்பில் பட்டதால், மொயீன் அலி அவுட்டாக நேரிட்டது. இதனால், அவர் 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய சின்ல் ன தல சுரேஷ் ரெய்னா, வெறும் 2 ரன்னில் அவர் ஹோல்டர் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.
Dhoni finishes off in style
இதன் பிறகு, ஆட்டத்தில் மற்றொரு திருப்புமுனையாக, அதே ஹோல்டர் ஓவரில் டு பிளசிஸ் 41 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேற, அப்போது தான் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு தோனி - ராயுடு பார்ட்னர்ஷிப் அமைக்க, இருவரும் சில பந்துகளை க்ளீயர் செய்ய தடுமாறினார். சித்தார்த் கவுல் வீசிய அந்த கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்களே தேவைப்பட்ட நிலையில், முதல் மூன்று பந்தில் 1 ரன் மட்டுமே கிடைத்தது. ஸ்டிரைக்கில் நின்றது தோனி. முதல் மூன்று பந்துகளையும் over the wicket-வீசிய கவுல், 4வது பந்தை around the wicket வந்து வீசினார். அந்த மூவ் தான் உண்மையில் தோனியின் வேகத்தையும், கோபத்தையும், ஆக்ரோஷத்தையும்.. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் ஈகோவையும் டச் செய்து அதிகப்படுத்தியது. பவுலர் டார்கெட் செய்ய நினைத்தது, வைட் யார்க்கர்.. ஆனால், பந்து Slot-ல் விழ, தோனிக்கு பேட்டுக்கு பந்து வரவில்லை, "லட்டு" வந்தது. அதனை சிதறடித்து ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் Roof-ல் "பூந்தி" மழை பொழிய வைத்தார். Dhoni finishes off in style.. என்ற வார்த்தைய பல நாட்களுக்கு பிறகு.. ஏன் பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்களை கேட்கச் செய்தார். கொண்டாடித் தீர்த்துவிட்டனர் சிஎஸ்கே ரசிகர்கள்!
சிறிய விண்ணப்பம்
கடந்த 2020 ஐபிஎல் தொடரில், இதே அமீரகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7வது இடத்தைப் பிடித்து, முதன் முறையாக பிளே ஆஃப் முன்னேற முடியாமல் வெளியேறியது. அதுவும், தோனியின் கேப்டன்ஷிப்பில். அப்போது அவர் சொன்ன வார்த்தை, இன்னும் பசுமரத்தாணி போல மனதில் உள்ளது. "நாங்கள் அடுத்த வருடம் இன்னும் வலிமையாக மீண்டு வருவோம். பார்த்துக் கொண்டே இருங்கள். மீண்டு வருவதற்கு பேர் போன அணி தான் சிஎஸ்கே" என்று பொட்டில் அடித்தது போல் சொன்னார். இன்று செய்துவிட்டார். இதோ, 2021 ஐபிஎல் தொடரின் முதல் அணியாக பிளே ஆஃப்-ல் என்ட்ரி கொடுத்திருக்கிறது தோனி வளர்த்தெடுத்த இந்த சென்னை அணி. ஒரு சிறிய விண்ணப்பம் என்னவெனில், தோனி இதே Touch-ஐ அடுத்தடுத்த போட்டிகளிலும் கன்டினியூ பண்ண வேண்டும் என்பது தான்.