சர்வதேச போட்டிகளில் ஓய்வு
முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் 2020 சீசனில் பங்கேற்ற அவர், தனது சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்யவில்லை. தன்னுடைய அணியையும் சிறப்பாக வழிநடத்த அவர் தவறினார்.
ஆர்கானிக் ஃபார்மிங்
ஆனால் தன்னுடைய ஓய்வை அறிவித்த கையுடன் புதிய புதிய பிசினசில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. சமீபத்தில் வெப் சீரிஸ் குறித்த தன்னுடைய அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்நிலையில், தன்னுடைய சொந்த ஊரான ராஞ்சியில் ஆர்கானிக் ஃபார்மிங்கில் அவர் ஈடுபட்டுள்ளார்.
பிடித்தமான பட்டாணி
அவர் தனது பண்ணையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருவதாக தெரிகிறது. அவரது பண்ணையில் உள்ள பட்டாணிகளை அவர் விரும்பி சாப்பிடுவாராம். அவருக்கு பொதுவாகவே பட்டாணி மிகவும் பிடித்தமான ஒன்று என்றும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தையில் டிமாண்ட்
இந்நிலையில் அவரது பண்ணையில் பயிரிடப்படும் தக்காளிகளுக்கு ராஞ்சி மார்க்கெட்டில் மிகுந்த வரவேற்பும் டிமாண்டும் காணப்படுகிறது. சமீபத்தில் தக்காளி விலை குறைந்துள்ள நிலையிலும், அவரது பண்ணையில் விளைந்த தக்காளிகள் கிலோ 40 ரூபாய் வரை விற்பனை ஆவதாக தெரியவந்துள்ளது.
விவசாயத்தில் கவனம்
பல்லேறு வாகனங்களை ஓட்டுவதில் குறிப்பாக இருசக்கர வாகனங்களை ஓட்டுவதில் மிகவும் பிரியம் உள்ளவர் தோனி. அவரது பண்ணை வீட்டில் பல்வேறு வாகனங்கள் காணப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோனி டிராக்டர் ஓட்டும் வீடியோ பகிரப்பட்டது. அப்போதே தான் விவசாயத்தில் கவனம் செலுத்துவதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.