2007 உலகக்கோப்பை வெற்றி
இந்தியாவில் தோனி என்ற பெயர் பட்டி தொட்டி எல்லாம் தெரியத் துவங்கியது எப்போது என்றால் அது 2007 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னர் தான். அதுவரை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமே அறிந்த அந்தப் பெயர், அப்போது தான் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது.
ரசிகர் கூட்டம்
அதே போல, தோனிக்கு இன்று இருக்கும் கட்டுக் கடங்காத ரசிகர் கூட்டத்துக்கு முக்கிய காரணம் 2011 உலகக்கோப்பை வெற்றி தான். கபில் தேவ்வுக்குப் பின் இந்தியாவுக்கு 50 ஓவர் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டன் தோனி என்பதால் அவர் மீது மரியாதை அதிகரித்தது.
விளம்பர நிகழ்ச்சி
சமீபத்தில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் மறக்க முடியாத வாழ்க்கை தருணங்கள் பற்றி கேட்கப்பட்டது. அப்போது தோனி அந்த இரு உலகக்கோப்பையின் போது நடந்த சம்பவங்கள் பற்றி கூறினார்.
மும்பை மரைன் டிரைவ்
"2007 டி20 உலகக்கோப்பையில் வென்ற பின் இந்திய அணி இந்தியா வந்த போது, மேற்கூரை இல்லாத பேருந்தில் பயணித்தோம். மும்பை மரைன் டிரைவ்வில் சென்ற போது, அதன் இரு புறமும் ரசிகர்கள் நிரம்பி இருந்தார்கள். அவர்கள் காரை விட்டு கீழே இறங்கி நின்று இருந்தார்கள்"
புன்னகை
"அவர்கள் முகத்தில் புன்னகையை பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது. காரணம், அதில் பலர் தங்கள் விமானத்தை விட்டிருந்தார்கள், சிலர் அலுவலகத்தில் முக்கிய வேலைக்காக சென்று கொண்டிருந்தார்கள்" என்றார் தோனி.
வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்
அடுத்து 2011 உலகக்கோப்பை இறுதியின் போது நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டார். "இரண்டாவது தருணம், 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டி. வெற்றிக்கு 15 - 20 ரன்கள் மட்டுமே தேவை என்ற போது ஒட்டுமொத்த வான்கடே மைதானமும், வந்தே மாதரம் பாடத் துவங்கினார்கள்"
மீண்டும் பெறுவது கடினம்
"இந்த இரண்டு தருணங்கள் தான் என் இதயத்துக்கு நெருக்கமான தருணங்கள். இவற்றை மீண்டும் பெறுவது கடினம்" என் தன் வாழ்வின் இரண்டு சிறந்த தருணங்கள் பற்றி கூறினார் தோனி.
மீண்டும் கிரிக்கெட் எப்போது?
இதே நிகழ்ச்சியில் தோனி எப்போது மீண்டும் கிரிக்கெட் ஆடப் போகிறார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கோலி, "ஜனவரி வரை எதுவும் கேட்காதீர்கள்" எனக் கூறினார்.
கேள்விகள்
தோனியின் அந்த பதில் பல்வேறு கேள்விகளை தான் தூண்டி விட்டுள்ளது. தோனியின் எதிர்காலம் குறித்து ஜனவரியில் தான் தெரிய வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.