ராஞ்சி: 2017-18 நிதியாண்டில் ரூ.12.17 கோடியை வருமான வரியாக செலுத்தி, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்தியவராக உள்ளார் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். தற்போது 37 வயதாகும் தோனிக்கு வயசாயிடுத்து, ஓய்வு பெற போகிறார் என தினமும் ஒரு புதுக் கதை உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், 2017-18 நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்தியவராக தோனி உள்ளார். அவர். 12.17 கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தியுள்ளார். அதற்கு முந்தைய ஆண்டு அவர் ரூ.10.93 கோடி செலுத்தினார். ஆனால், அந்த ஆண்டில் அதிக வரி செலுத்தியோரில் அவர் முதலிடத்தில் இல்லை.
கிரிக்கெட் விளையாடுவதற்கான சம்பளத்தைத் தவிர, பல்வேறு விளம்பரங்கள் மூலம் தோனிக்கு வருமானம் கிடைத்து வருகிறது. ஏற்கனவே 2013-14 நிதியாண்டிலும் பீகார், ஜார்க்கண்ட் மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்தியோரில் முதலிடத்தில் தோனி இருந்தார்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது, அதிக வரி செலுத்துவது என்பதல்ல. வருமானத்தை முறையாக கணக்கு காட்டி அதற்கு வரி செலுத்துவதுதான். பல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கும் நிலையில், முறையாக வரி செலுத்தி, என் வழி தனி வழி என்பதை தோனி நிரூபித்துள்ளார்.