அணிக்காக எடுத்த முடிவு
இந்த முடிவை தோனி எடுக்க முக்கிய காரணம், தனக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூடுதல் செலவு செய்யக் கூடாது என்பது தானாம். தற்போது ஐபிஎல் தொடரில் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் பெற்று வருகிறார் தோனி.
குறைந்த விலை
2021ஆம் ஆண்டு நடைபெறும் மெகா ஏலத்தில் சென்றால், இதைவிட குறைந்த விலைக்கு சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்பட வாய்ப்பு ஏற்படும் என தோனி நினைப்பதாக கூறப்படுகிறது.
தோனி ஓய்வு குழப்பம்
தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தொடர்ந்து பல்வேறு வதந்திகள் வந்த நிலையில், அவரது எதிர்காலம் என்ன என்பதில் ரசிகர்கள் இடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
ஐபிஎல் தொடர்
எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனி 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படுவார் என உறுதியாக கூறி இருந்தது. இந்த நிலையில், 2021 ஐபிஎல் தொடரிலும் தோனி பங்கேற்கப் போவதாக சிஎஸ்கே அணி வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன.
2021 ஐபிஎல் தொடர்
அந்த தகவலின் படி, 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளதாக சிஎஸ்கே உரிமையாளர்களிடம் கூறி இருக்கிறார் தோனி. அதே சமயம், தன்னை சிஎஸ்கே அணி தக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி இருக்கிறார்.
ஏலத்தில் விடுங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு வெளியேற வேண்டி தோனி இவ்வாறு கூறவில்லை. மாறாக, ஏலத்தில் பங்கேற்று தன் ஏல மதிப்பை குறைத்துக் கொண்டு மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புவதே அவர் திட்டமாக உள்ளது.
காரணம் என்ன?
தோனி 2021 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால் அவரின் தற்போதைய ஐபிஎல் மதிப்பான 15 கோடியை விட குறைந்த விலைக்கே ஏலம் போவார். அதனால், சிஎஸ்கே அணிக்கு சில கோடி ரூபாய் தன் மூலமாக மிச்சமாகும் என்பதே தோனியின் எண்ணமாக உள்ளது.
ரைட் டு மேட்ச் அதிகாரம்
ஏலத்தில் தோனியை எந்த அணி வாங்கினாலும், சிஎஸ்கே அணி "ரைட் டு மேட்ச்" என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவரை அப்போதைய ஏல மதிப்பில் வாங்கிக் கொள்ள முடியும். அதனால், தோனி சிஎஸ்கே அணியை விட்டு வேறு அணிக்கு செல்லாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
சிஎஸ்கே முடிவு என்ன?
ஆனால், தோனி இப்படி சொன்னாலும் சிஎஸ்கே அணி அவரை விடுவிக்கப் போவதில்லை என்ற முடிவில் இருப்பதாகவே தெரிகிறது. தோனியை ஏலத்தில் விடாமல் தக்க வைத்துக் கொண்டால் சிஎஸ்கே அணி அவருக்கு இன்னும் கூடுதல் தொகை வழங்க நேரிடலாம்.
சிஎஸ்கே - தோனி உறவு
தோனி எப்போதுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் அதிக நெருக்கம் காட்டுபவர். தன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அந்த அணிக்கு தான் உண்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தனக்கு கிடைக்கும் அதிக பணத்தை கூட விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளார் என்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.