ராஞ்சி: டோணி தனது 34வது பிறந்த நாளின்போது, இதுவரை கிடைக்கப்பெறாத விலைமதிப்பில்லாத ஒரு கிஃப்டை பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணி இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஒவ்வொரு ஆண்டும், விளையாட்டு தொடர்பாக பிசியாக இருக்கும் டோணி, தற்போது ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில் இருந்து விலகியிருப்பதால், முழு கவனத்தையும் குடும்பத்தின் மீது வைத்துள்ளார்.
இந்த வருட பிறந்த நாள் 34 ஆண்டுகளில் முதல்முறையாக டோணிக்கு மிகுந்த ஸ்பெஷல். ஏனென்றால், இப்பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, விலை மதிக்க முடியாத ஒரு பரிசு டோணியுடன் உள்ளது. அந்த கிஃப்ட் வேறு யாருமல்ல, ஷிவா. டோணியின் செல்ல மகள்.
கடந்த பிப்ரவரி மாதம், இந்திய அணி உலக கோப்பையில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த தருணத்தில் குர்கானில் டோணி மனைவி சாக்ஷி பெற்றெடுத்த அழகான பெண் குழந்தையின் பெயர்தான் ஷிவா. பேறுகாலத்தின்போது உடன் இருக்க முடியாத டோணி, உலக கோப்பை தொடர் முடிந்து தாயகம் திரும்பினார். அதன்பிறகு, தனது மகளை எப்போதும் உடன் இருந்து பார்த்துக் கொண்டார். எங்கு சென்றாலும், குழந்தையை தன்னோடு எடுத்துச் செல்வார் டோணி.
"நான் இந்தியாவுக்காக ஆடுகிறேனோ, சென்னைக்காக ஆடுகிறேனோ.. அதெல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால், எப்போதும், அழுது கொண்டேயிருக்கத்தான் தெரியும். அந்த சத்தம் எனக்கு ஒரு நல்ல உணர்வை தருகிறது" என்று ஷிவாவின் அழுகையைகூட சங்கீதமாக வர்ணித்தார் டோணி.
இப்பிறந்த நாளின்போது, டோணி தனது செல்ல மகளோடு நேரத்தை செலவிட்டு வருகிறார்.