அம்ரபலி நிறுவனம்
கடந்த 2003ஆம் ஆண்டு ஐஐடியில் படித்த அனில் ஷர்மா என்பவரால் துவங்கப்பட்ட அம்ரபலி நிறுவனம் வட இந்திய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வீடு கட்டித் தருவதாக பல ஆயிரம் கோடி பணம் பெற்றது.
மோசடி வழக்கு
வீடு கட்டித் தருவதாக ஆயிரக்கணக்கான மக்களிடம் பல ஆயிரம் கோடிகளை வாங்கிய அம்ரபலி நிறுவனம், அதை வீடு கட்ட பயன்படுத்தாமல், 150க்கும் மேற்பட்ட நிறுவனங்களில், பல்வேறு வியாபாரங்களில் முதலீடு செய்து நிதி மோசடி செய்தது. அது தொடர்பாக உச்சநீதிமன்றம் 2017 முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
விளம்பர தூதர் தோனி
அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்தவர் நீண்ட காலம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி. துவக்கம் முதலே தோனியையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என பலர் கூறி வந்தனர்.
தோனி வழக்கு
இடையே தோனி சார்பாக அவருக்கு விளம்பர தூதராக நிறைய பணம் பாக்கி உள்ளது என ஒரு வழக்கு தொடரப்பட்டு நடந்து வந்தது. இந்த நிலையில், ஜூலை 23 அன்று அம்ரபலி மோசடி வழக்கின் ஒரு கிளை வழக்கில் அதிரடி தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
அந்த தீர்ப்பில் அம்ரபலி நிறுவனம் எந்த கம்பெனிகளுக்கு வீடு வாங்க முதலீடு செய்தவர்களின் பணத்தை அளித்துள்ளது என்பது பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் தோனி மனைவி சாக்ஷி உரிமையாளராக இருக்கும் கம்பெனியும் இருந்தது.
ஏழு குழுக்கள் அளித்த புகார்
அந்த வழக்கின் தீர்ப்புக்குப் பின் அம்ரபலி நிறுவனத்தில் வீடு வாங்க முதலீடு செய்து ஏமாந்தவர்களின் சார்பாக ஏழு குழுக்கள் டெல்லி பொருளாதார குற்றப் பிரிவில் தோனி குறித்து புகார் அளித்துள்ளன. அவர்கள் அளித்துள்ள புகார்களுக்கு எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
கிரிமினல் சதித்திட்டம்
அவர்கள் அளித்துள்ள அந்த எஃப்ஐஆர்-களில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் கிரிமினல் சதித் திட்டத்தில் தோனியும் ஒரு பகுதி என்பதால் அவரையும் குற்றவாளியாக கருதி அவர் மீது எஃப்ஐஆர் போட வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
அவரை நம்பினோம்
மேலும், அந்த எஃப்ஐஆர்-களில் தோனி போன்ற ஒரு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் அனில் ஷர்மா என்ற ஐஐடி பட்டம் பெற்ற கட்டுமான நிறுவனரை நம்பித் தான் நாங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிக்கலில் தோனி
இந்த விவகாரத்தால் தோனி சிக்கலில் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. பொருளாதார குற்றப் பிரிவிடம் தோனி குறித்து புகார் அளிக்கப்பட்டாலும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வருவதால், காவல்துறை தங்கள் அறிக்கைகளை அங்கே தான் சமர்பிக்கும்.
டிசம்பர் 2 விசாரணை
டிசம்பர் 2 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருவதால் டெல்லி பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறை அறிக்கை சமர்பிக்க உள்ளது. அதில் தோனி மீதான புகார் பற்றி நிச்சயம் தகவல்கள் இடம் பெற்று இருக்கும் என கருதப்படுகிறது.