ரெய்னா விலகல்
சிஎஸ்கே அணியில் இருந்து அந்த அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா விலகி உள்ளார். 2020 ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியதாக அந்த அணியும் அறிவித்து இருந்தது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் ரெய்னா.
மாற்று வீரர் இல்லை
சுரேஷ் ரெய்னா முக்கிய வீரர் என்ற நிலையில் அவரது இழப்பு சிஎஸ்கே அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. மேலும், ரெய்னாவுக்கு மாற்று வீரரையும் சிஎஸ்கே அணி தேர்வு செய்யவில்லை. அதுவும் அணித் தேர்வில் சிக்கலை உண்டாக்க உள்ளது.
இடது கை ஆட்டக்காரர்
குறிப்பாக ரெய்னாவின் இழப்பால் சிஎஸ்கே அணி இடது கை பேட்ஸ்மேன் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. ஆம், ரெய்னாவை தவிர ஒரு முழு நேர இடது கை பேட்ஸ்மேன் கூட சிஎஸ்கே அணியில் இல்லை. இது அந்த அணியின் பெரிய பலவீனமாக மாறி உள்ளது.
எப்படி இது பலவீனம்?
லெக் ஸ்பின்னர்கள் பந்துகள் வலது கை பேட்ஸ்மேனுக்கு பேட்டிங்செய்ய எளிதாக இருக்காது. அதே சமயம், இடது கை பேட்ஸ்மேனுக்கு லெக் ஸ்பின் எளிதாக பேட்டிங் செய்ய வரும். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தும். எனவே தான், இடது கை பேட்ஸ்மேன் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பலவீனமாக மாறி உள்ளது.
வேறு இடதுகை பேட்ஸ்மேன்கள் யார்?
அணியில் இருக்கும் வேறு இடது கை பேட்ஸ்மேன்கள் இருவரும் ஆல் - ரவுண்டர்கள். அதில் ஒருவர் இளம் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன். மற்றொருவர், அனுபவம் வாய்ந்த ஜடேஜா. இவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் அணியில் சேர்ப்பதும் கடினமே.
டீன் ஜோன்ஸ் என்ன சொன்னார்?
இது குறித்து டீன் ஜோன்ஸ் கூறுகையில், ரெய்னா இல்லாதது பெரிய கவலை. அவர் இடது கை பேட்ஸ்மேன். ஸ்பின்னை நன்றாக ஆடக் கூடியவர். இது சிஎஸ்கே அணியின் பலவீனம். அந்த அணியில் பெரும்பாலும் வலது கை பேட்ஸ்மேன்கள் தான் உள்ளனர் என்றார்.
மேலும், அவர்களுக்கு சில இடது கை பேட்ஸ்மேன்கள் தேவை. இல்லையெனில் மாட்டிக் கொள்வார்கள். குறிப்பாக பந்து திசை மாறிப் போகும் சூழ்நிலையில் லெக் ஸ்பின்னர்களிடம் சிக்குவார்கள் என்றார் டீன் ஜோன்ஸ். அணித் தேர்விலும் இது சிக்கலை ஏற்படுத்தும் என்றார்.
அணித் தேர்வில் சிக்கல்
சாம் கர்ரன் அல்லது ஜடேஜா, பிராவோ அல்லது தாஹிர் யாரை அணியில் தேர்வு செய்வது, தோனி, ஷேன் வாட்சன் நீண்ட நாட்களாக போட்டிகளில் பேட்டிங் செய்யவில்லை. ரெய்னா, ஹர்பஜன் இல்லை. எனவே, இந்த சிக்கல்களுடன் அணியை எப்படி ஒன்றிணைப்பது என பிளெம்மிங், தோனி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
தோனிக்கு தலைவலி
தோனிக்கு அணித் தேர்வு இந்த சீசனில் மிகப் பெரும் தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலே கூறிய அத்தனை சிக்கல்களுடன், இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீளாமல் இருப்பதும் சேர்ந்து கொண்டுள்ளது. அவர் முதல் சில போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.