வீரர்கள் ஒப்பந்தம்
பிசிசிஐ வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தத்தை வியாழன் அன்று வெளியிட்டது. அந்தப் ஒப்பந்தப் பட்டியலில் கோலி, ரோஹித் சர்மா முதல் இளம் வீரர்கள் வரை 27 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர்.
தோனி பெயர் நீக்கம்
அந்தப் பட்டியலில் தோனி பெயர் இந்த முறை இடம் பெறவில்லை. அது பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஏற்கனவே, தோனி கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என தகவல் பரவி வரும் நிலையில், இந்த அதிரடி முடிவை எடுத்தது பிசிசிஐ.
பரவிய வதந்தி
பிசிசிஐ ஏன் தோனியின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது என பல்வேறு ஊகங்கள் வலம் வருகின்றன. சிலர் பிசிசிஐ, தோனியை அவமரியாதை செய்து விட்டதாகக் கூறி வருகின்றனர்.
பிசிசிஐ விளக்கம்
இந்த நிலையில், பிசிசிஐ சார்பாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். அவர் தோனியிடம் பிசிசிஐ இது குறித்து தெரிவித்த பின்னரே, அவரை நீக்கியதாக கூறி உள்ளார்.
தோனியிடம் பேசியாச்சு
தோனி செப்டம்பர் 2019 முதல் தற்போது வரையிலான காலத்தில் எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவரை ஒப்பந்தத்தில் சேர்க்க முடியாது என்பதை முக்கியமான பிசிசிஐ அதிகாரி மூலம் தெரிவித்து விட்டதாக கூறினார் அவர்.
முறையாக கூறி விட்டோம்
தோனி போன்ற மதிப்பு கொண்ட வீரரிடம் ஒப்பந்தம் அளிக்கப் போவதில்லை என்பதை நிச்சயம் கூற வேண்டும் என்பதால் அதை முறையாக கூறி விட்டோம் என்றார் அந்த அதிகாரி.
மீண்டும் சேரலாம்
தோனி ஒப்பந்தத்தில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளார் என்றும், அடுத்து அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி, பின் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்று தன்னை நிரூபித்தால் நிச்சயம் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
யார் அந்த முக்கிய நபர்?
தோனியிடம் இந்த தகவலை சொன்ன அந்த முக்கிய பிசிசிஐ நபர் யார் என்பதை அவர் கூறவில்லை. அது பிசிசிஐ தலைவர் கங்குலி அல்லது செயலாளர் ஜெய் ஷாவாக இருக்க வாய்ப்பு உள்ளது.
அதிர்ச்சியில் ரசிகர்கள்
தோனி விஷயத்தில் பிசிசிஐ இப்படி நடந்து கொண்டதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தோனியின் சாதனைகளை பட்டியலிட்டு, இப்படி ஒரு வீரரைத் தான் நீங்கள் நீக்கி இருக்கிறீர்கள் என அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
தோனி முடிவு என்ன?
தோனி அடுத்து 2020 ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிகிறது. அதற்கான பயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்திய அணியில் ஆட தோனி விரும்புகிறாரா? என்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.