இந்திய அணித் தேர்வு
உலகக்கோப்பை தொடர் முடிந்த நிலையில், இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணித் தேர்வு நடைபெற்றது. இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை.
இராணுவத்தில் தோனி
தோனி இரண்டு மாதம் இராணுவத்தில் பணிபுரிய உள்ளதால் இந்த தொடரில் விளையாட முடியாது என கூறியதாக பிசிசிஐ தகவல் அளித்தது. அதே காரணத்தால், இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் தோனி இடம் பெறவில்லை என்றும் கருதப்பட்டது. ஆனால், தோனி இப்படி அமைதியாக அணியில் இருந்து ஒதுங்க வேறு ஒரு காரணம் உள்ளது.
பிரசாத் விளக்கம்
இது குறித்து விளக்கமளித்த தேர்வுக் குழு தலைவர் பிரசாத், "தோனி இப்போது (இரண்டு மாதங்களுக்கு) விளையாடவில்லை. மேலும், நாங்கள் இளம் வீரர்களை தயார் செய்ய ஆரம்பித்து விட்டோம்" என்றார். ஆனால், உண்மையில் தோனியிடம் அவரது எதிர்காலம் குறித்து தேர்வுக் குழு பேசியதாக கூறப்படுகிறது. அது பற்றி, பிரசாத் ஏதும் தெரிவிக்கவில்லை.
நடந்தது என்ன?
தோனியிடம் பேசிய தேர்வுக் குழு தோனியை இனியும் இந்திய அணியின் ஒரு பகுதியாக கருத முடியாது. நாங்கள் இளம் வீரர்களை வைத்து திட்டமிட்டு வருகிறோம் என கூறியுள்ளது. அதற்கு தோனி உங்கள் திட்டப்படி செய்யுங்கள் என கூறியதாகவும் தெரிகிறது.
இனி ஓய்வு தான்
தோனி இப்போது ஓய்வு பெறுவதை தவிர வேறு வழி எதுவும் இல்லை என தெரிகிறது. இரண்டு மாதங்கள் கழித்தும் இந்திய அணியில் தோனியை தேர்வு செய்யப் போவதில்லை எனும் நிலையில், தோனி ஓய்வு பெறலாம் அல்லது பிசிசிஐ தோனியை அணியில் நீக்கியதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.
அணியின் விக்கெட் கீப்பர் யார்?
இனி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தான் என்பதை பிரசாத் கூறி இருக்கிறார். தற்போது டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக இருக்கும் அவர் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 அணியிலும் விக்கெட் கீப்பராக இருப்பார். தோனி அளவுக்கு இல்லை என்றாலும், ரிஷப் பந்த் வேகமாக கற்றுக் கொண்டு வருகிறார்.