கிரிக்கெட் ஆடவில்லை
இந்த ஏக்கத்துக்கும் ஒரு காரணம் உள்ளது. 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்திய அணியில் மட்டுமின்றி, உள்ளூர் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. அவர் கிரிக்கெட் போட்டியில் ஆடி சுமார் ஓராண்டு காலம் ஆகப் போகிறது.
2020 ஐபிஎல்
இந்த நிலையில், அவ்வப்போது பொது வெளியில் தோனி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மட்டுமே அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. பின்னர் தோனி 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க தயார் ஆனார். அதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா வைரஸ்
ஆனால், அதற்கு இடையே கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. அதனால், ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தோனியை மீண்டும் களத்தில் பார்க்கலாம் என ஆவலுடன் இருந்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
லாக்டவுன்
பின்னர், இந்தியா முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. தோனி ராஞ்சியில் உள்ள தன் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி இருக்கிறார். மறுபுறம் ரசிகர்கள் தோனி குறித்து வெளியான ஒவ்வொரு விஷயத்தையும் பெரிய அளவில் பகிர்ந்து வந்தனர்.
தோனியின் புகைப்படங்கள்
இந்த நிலையில் அவ்வப்போது தோனியின் புகைப்படங்களை அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டு வந்தார். அது மட்டுமே தீவிர தோனி ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்து வந்தது. ரசிகர்கள் அதை ட்விட்டரில் அதிகம் பகிர்ந்தும் வந்தனர்.
வெள்ளை தாடியுடன் தோனி
ஒருமுறை அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தோனி வெள்ளை தாடியுடன் இருக்கும் காட்சி இடம் பெற்று இருந்தது. உடனடியாக தோனியின் புதிய தோற்றம் வைரல் ஆனது. சிலர் தோனிக்கு வயதாகி விட்டதாக கூட அதை வைத்து கூறி இருந்தனர்.
வித்தியாசமான ஹேர்கட்
இந்த நிலையில், சமீபத்தில் தோனியின் மற்றொரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் தோனி காக்கி உடை அணிந்துள்ளார். பல நாள் சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன், வித்தியாசமான ஹேர்கட் செய்து கொண்டு காட்சி அளித்தார்.
ட்ராக்டர் ஓட்டினார்
அவர் தன் பண்ணையில் ட்ராக்டர் ஓட்டும் காட்சிகளும் அத்துடன் வெளியாகி இருந்தது. தோனியின் இந்த புதிய தோற்றமும் தோனி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. 2020 ஐபிஎல் அக்டோபரில் நடக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் தோனியை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.