சிஎஸ்கேவில் பல குழப்பங்கள்
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் மட்டும் பல குழப்பங்கள் நடந்தேறின. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க சிஎஸ்கே அணி துபாய் சென்றது. அப்போது முதல் பிரச்சனைகளும் துவங்கின.
கொரோனா வைரஸ்
முதல் வாரம் முழுவதும் சிஎஸ்கே வீரர்கள் மற்றும் அணியை சேர்ந்த பிற பணியாளர்கள் குவாரன்டைனில் இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனைகளில் தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட் உள்ளிட்ட இரு வீரர்களுக்கும், 11 பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
சுரேஷ் ரெய்னா விலகல்
இதை அடுத்து சுரேஷ் ரெய்னா துபாய் சிஎஸ்கே முகாமில் இருந்து விலகி இந்தியா வந்தார். அவர் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அவ்வாறு செய்ததாக தகவல் வெளியானது. 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே அவர் விலகியதாக சிஎஸ்கே அணி கூறியது.
ஹர்பஜன் சிங் முடிவு
ஹர்பஜன் சிங் துபாய்க்கே செல்லவில்லை. அவரும் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இரண்டு முக்கிய வீரர்களை இழந்து தவித்து வருகிறது சிஎஸ்கே அணி. அவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்கள் தேர்வு செய்யும் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு உள்ளது.
மாற்று வீரர்கள்?
இதுவரை சிஎஸ்கே அணி மாற்று வீரர்களை தேர்வு செய்யவில்லை. இன்னும் ஐபிஎல் தொடருக்கு 10 நாட்களே உள்ள நிலையில் மாற்று வீரரை தேர்வு செய்யாததால் சிஎஸ்கே அணி என்ன திட்டமிட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது?
ரெய்னா மீண்டும் இணைவாரா?
ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக ஒருபுறம் கூறப்படுகிறது. ஆனால், அதுபற்றி சிஎஸ்கே அணி நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் கூறவில்லை. கேப்டன் தோனி அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொள்வார் எனக் கூறி ஒதுங்கிக் கொண்டுள்ளது.
பிரச்சனை இல்லை
ஹர்பஜன் சிங் இல்லாவிட்டாலும், அவருக்கு மாற்றாக வேறு சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாவிட்டாலும் கூட சிஎஸ்கே அணியில் ஜடேஜா, பியுஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், கரன் சர்மா, மிட்செல் சான்ட்னர் என பல சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களை வைத்து தோனி சமாளித்துக் கொள்வார்.
ரெய்னா விவகாரம்
ஆனால், ரெய்னா விவகாரம் தான் மர்மமாக உள்ளது. தோனி, சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்வாரா?. கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் ஒரு வீரரை தேர்வு செய்யுமாறு தோனியிடம் தான் பரிந்துரைத்த போது என்ன நடந்தது என்பது பற்றி கூறி இருந்தார்.
தோனி என்ன சொன்னார்?
ஒரு சிறந்த வீரரை தேர்வு செய்யலாம் என சீனிவாசன் கூறிய போது தோனி அந்த வீரர் வேண்டாம். அவரை தேர்வு செய்தால் அணியின் சூழ்நிலை பாதிக்கப்படும் என கூறி இருக்கிறார். தோனி அணியின் சூழ்நிலை தான் முக்கியம் என எப்போதும் கருதுகிறார் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவத்தை கூறினார் சீனிவாசன்.
தோனி மாறுவாரா?
இந்த நிலையில், சிஎஸ்கே நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுரேஷ் ரெய்னா வெளியேறிய நிலையில், அவர் மீண்டும் அணிக்குள் வந்தால் அது சிஎஸ்கே அணியில் எத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தும்? அதை தோனி விரும்புவாரா? அல்லது ரெய்னாவுக்காக தோனி மாறுவாரா?