தோனி நிலை
தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவராகவே ஓய்வு எடுத்துக் கொண்டதாக சிலரும், பிசிசிஐ அவரை இனி அணியில் தேர்வு செய்யாது என சிலரும் கூறி வருகின்றனர். அவரது உடற்தகுதி தான் காரணம் என்ற பேச்சும் உள்ளது.
அணிக்கு வர வாய்ப்பு
எனினும், தோனி இந்திய அணிக்கு திரும்புவார் என அவரது ரசிகர்கள் பலரும் நம்பி வருகின்றனர். இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், தோனி தன் பார்ம் மற்றும் உடற்தகுதியை நிரூபித்தால் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்றார்.
2020 ஐபிஎல் தொடர்
அதற்கு அவர் 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக 2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்புள்ளது.
ரிஷப் பண்ட், ராகுல்
இந்த நிலையில், தோனி இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் அதற்கு அணியின் சூழ்நிலைகள் சாதகமாக இல்லை. அணியின் விக்கெட் கீப்பராக ராகுலும், மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும் உள்ளனர்.
கடினம்
ராகுல், ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களுக்கு மாற்றாக தோனியை அணியில் சேர்த்துக் கொள்ள அணி நிர்வாகம் ஒப்புக் கொள்ளாது என்பதே பலரும் சொல்லும் கருத்தாக உள்ளது. முந்தைய தேர்வுக் குழு தலைவர் பிரசாத், தோனியை தாண்டி இந்திய அணி சென்று விட்டது என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
தோனி வருவாரா? மாட்டாரா?
தோனி மீண்டும் அணிக்கு திரும்புவாரா? அவரது எதிர்காலம் என்ன என்ற கேள்விக்கு எந்த பதிலும், யாரிடமும் இல்லை. அதே சமயம், தோனியை பற்றி பேசாமல் இருக்கவும் யாராலும் முடியவில்லை என்பதும் உண்மை. சமீபத்தில், கவாஸ்கர் தோனி குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.
கவாஸ்கர் கருத்து
"தோனியை டி20 உலகக்கோப்பை அணியில் பார்க்க விரும்புகிறேன். ஆனால், அது நடக்க வாய்ப்பில்லை. இந்திய அணி அவரை தாண்டி சென்று விட்டது." என இந்திய அணி தோனியை தேர்வு செய்யாது என்பதை சுட்டிக் காட்டினார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
அமைதியாக ஓய்வு பெறுவார்
"தோனி பெரிய அறிவிப்பு வெளியிடுபவர் அல்ல. அவர் அமைதியாக ஓய்வு பெறுவார் என கருதுகிறேன்" எனவும் கூறினார் கவாஸ்கர். தோனி டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றதை சுட்டிக் காட்டி தான் கவாஸ்கர் இப்படி கூறி உள்ளார்.
டெஸ்ட் ஓய்வு
கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் பாதியில் கேப்டன் பதவியை துறந்த தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்றார். அதே போல, இப்போதும் தோனி அமைதியாக ஓய்வை அறிவிக்கக் கூடும் என கூறுகிறார் கவாஸ்கர்.