இரண்டு மாதம்
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆட உள்ள நிலையில் தோனி அந்த தொடரில் இருந்து தானே விலகினார். அடுத்த இரண்டு மாதங்கள் தான் இராணுவத்தில் பணிபுரிய உள்ளதாக கூறினார்.
16 நாட்கள் பணி உறுதி
இராணுவம் அதற்கு அனுமதி அளித்ததுடன், தோனி வரும் ஜூலை 29 முதல் 16 நாட்கள் காஷ்மீர் தரைப்படையுடன் இணைந்து பணிபுரிவார் என்றும் அறிவித்தது. அதனால், தோனி ரசிகர்கள் பரபரப்பாக இருந்தார்கள். தோனி எல்லையில் பணிபுரியும் காட்சிகளை காண ஆவலாக இருந்தார்கள்.
சென்னையில் பேச்சு
ஆனால், ஞாயிறு அன்று தோனி சென்னையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வெளியாகி அவர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. அங்கே அவர் என்ன பேசினார் என்பது தான் வேடிக்கை. கல்யாண வாழ்க்கை பற்றி பேசி அசத்தினார்.
கல்யாண வாழ்க்கை
அவர் பேசுகையில், "கல்யாணம் ஏன் தேவை என்றால், நீங்கள் ஐம்பது வயதை தாண்டும் போது, அது தான் உண்மையான காதலுக்கான நேரம். உங்கள் குழந்தைகள் பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்று விடுவார்கள். அப்போது தான் உங்களுக்கான நேரம் கிடைக்கும்" என்று குறிப்பிட்டார்.
திடீர் குழப்பம்
தோனி இராணுவத்தில் இணைந்து விட்டார் என்றே இதுவரை தகவல்கள் வெளியான நிலையில், சென்னையில் அவர் பேசியது குழப்பத்தை உண்டாக்கி உள்ளது. சென்னையில் பேசி முடித்த தோனி, அடுத்து மும்பை விமான நிலையத்திற்கு சென்றது குறித்த தகவல்களும் கிடைத்தன.
எப்போது சேருவார்?
இந்திய இராணுவம் ஏற்கனவே அறிவித்தபடி தோனி வரும் ஜூலை 29 அன்று தரைப்படையுடன் பணிபுரிய உள்ளார், அனேகமாக அன்று தான் இராணுவத்தில் அவரது முதல் நாளாக இருக்கும்.