ரசிகர்களுடன் திடீர் மோதல்
ஜோஹன்னஸ்பர்க் போட்டியில் இம்ரான் விளையாடவில்லை. இதனால் அவர் போட்டியை வெறும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் திடீரென சில ரசிகர்களுடன் அவர் வாக்குவாதத்தில் இறங்கினார்.
குழந்தையைத் தாக்கினாரா
இதுதொடர்பாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அதில் இம்ரான் ரசிகர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக உள்ளது. அப்போது இம்ரான் தாஹிர் ஒரு குழந்தையைத் தாக்கியதாகவும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அதை இம்ரான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இனவெறி டீசிங்
இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் செளத் ஆப்ரிக்கா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் (ரசிகர்) வார்த்தையாலும், இன ரீதியாகவும் இம்ரான் தாஹிரை கிண்டலடித்துப் பேசினார். இதுகுறித்து அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் விஷயத்தைக் கொண்டு சென்றார் இம்ரான் தாஹிர்.
யாரையும் அடிக்கவில்லை
இதையடுத்து சம்பந்தப்பட்ட ரசிகரை வெளியேறுமாறு போலீஸார் உத்தரவிட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம்தான் பெரிதாக்கப்பட்டு விட்டது. யாருடனும் உடல் ரீதியான மோதலில் இம்ரான் தாஹிர் ஈடுபடவில்லை. இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்
இம்ரான் தாஹிர் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர். 1998ம் ஆண்டு அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயர்ந்து வந்து குடியேறினார். 2011ம் ஆண்டு முதல் அவர் சர்வதேச போட்டிகளில் தென் ஆப்பிரிக்காகவுக்காக ஆடி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.