ஆட்டநாயகன் “விருதா”? வெறும் அட்டையா?
கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆட்ட நாயகன் விருது என்பது ஒரு பெரிய அட்டையில் விளம்பரதாரர் பெயர்களோடு, செக் மதிப்பு குறிக்கப்பட்டு இருக்கும். இந்த அட்டையை உண்மையில் வங்கியில் செலுத்த முடியாது. மக்கள் தெளிவாக பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அட்டை பெரிதாக வடிமைக்கப்பட்டு இருக்கிறது. இது நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்கும். ஆட்டநாயகன் விருது வாங்கும் வீரருக்கு அதற்கான தொகை வேறு முறையில் வழங்கப்படும். பெரும்பாலும், கிரிக்கெட் போர்டுகள் மூலம் அந்த பணம் சென்றடையும்.
இது வேற பிரச்சனை மக்களே!
இந்த நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி முடிந்த உடன் ஜடேஜா 4 விக்கெட்கள் வீழ்த்தியதற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதில் ஒரு லட்ச ரூபாய் என மதிப்பிடப்பட்டு இருந்தது. அந்த ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்ட அட்டை இப்போது குப்பையில் கிடக்கிறது. ஜடேஜாவுக்கு எப்படியும் அந்த பணம் வேறு வடிவில் கிடைத்து விடும். இது குப்பையில் போனால் என்ன? இங்கே தான் வேறு ஒரு பிரச்சனை முளைத்துள்ளது.
இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் பிசிசிஐ
இந்த விருது அட்டை குப்பையில் கிடப்பதை படமாக எடுத்து தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ப்ராக்ருதி என்ற நபர். அவர் அதில் இயற்கையை பாதிக்கும் வகையில் இந்த பிளாஸ்டிக் பொருளால் தயாரான விருது அட்டை குப்பையிலே கிடக்கிறது. மரியாதை அளிக்கும் வகையில் வழங்கப்படும் ஒரு விருதை பிசிசிஐ ஏன் இப்படி வெறும் பிளாஸ்டிக் அட்டையாக வழங்கி, வீரர்களுக்கும் ஞாபகார்த்தமாக இல்லாமல், இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
குப்பை அகற்றும் ஊழியர்கள் முக்கியம்
இந்த அட்டையை பிடித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஜெயன் என்ற குப்பை அகற்றும் ஊழியர் தான் இப்போது ஆட்ட நாயகன் எனவும் குறிப்பிட்டு குப்பை அகற்றுபவர்களின் முக்கியத்துவத்தையும் கூறியுள்ளார் அந்த நபர். உண்மையில், ஜடேஜா மட்டுமல்ல அனைத்து நாடுகளின் வீரர்களும் இது போன்ற ஆட்ட நாயகன் விருதுகளை போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது கையில் வாங்குவார்கள். அதன் பின் அதை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அவர்களை சொல்லியும் குற்றமில்லை. இந்த ஒன்றுக்கும் உதவாத அட்டையை வைத்துக் கொண்டு அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்?