தோனி ஓய்வு பற்றி கோலி
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் தோற்று வெளியேறிய பின்னர் கேப்டன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோனி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வருவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்வியை கோலி தவிர்த்து இருக்கலாம் அல்லது அதை பேச இது நேரம் அல்ல என கூறி இருக்கலாம். ஆனால், தோனி ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்றார். அப்போதே லேசாக நெருடியது.
ரோஹித் - தோனி
அதன் பின் ரசிகர்கள் மத்தியிலும், சில பிசிசிஐ அதிகாரிகள் மட்டத்திலும், இந்திய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. ரோஹித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் என கூறப்பட்டது. ஒருவேளை ரோஹித் கேப்டனாக இருந்தால், நிச்சயம் அவர் தோனியை விட்டுக் கொடுக்க மாட்டார்.
ரோஹித் கேப்டன் இல்லை
விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது ஓய்வில் இருப்பார் என்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். அது கேப்டனை மாற்ற ஒரு முன்னோட்டம் எனவும் கூறப்பட்டது. ஆனால், திடீரென ஓய்வு எல்லாம வேண்டாம் என விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆட உள்ளதாக கூறினார். அதனால், ரோஹித் சர்மா கேப்டனாக இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
நடந்தது என்ன?
இதையடுத்து திடீரென தோனி அடுத்த இரண்டு மாதங்கள் இராணுவத்துடன் நேரம் செலவிட உள்ளதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றது பிசிசிஐ. அணித் தேர்விலும் தோனி பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஓய்வு பற்றி சூசகம்
தேர்வுக் குழு தலைவர் தோனி போன்ற மூத்த வீரருக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது தெரியும் என சூசகமாக கூறி விட்டு சென்றார். ஒரு இடத்தில் கூட கேப்டன் விராட் கோலிக்கு, தோனி விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்பது போலத் தான் உள்ளது.
ரோஹித் இருந்தால்..
ஒரு வேளை ரோஹித் சர்மா கேப்டனாக இருந்திருந்தால் தோனி அணியில் இடம் பெற்று இருப்பாரா? என்ற கேள்விக்கு பலரும் ஆம் என்றே பதில் சொல்வார்கள். அதே சமயம், கோலிக்கும், தோனி நீக்கம் அல்லது விலகலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் நாம் நம்பித் தான் ஆக வேண்டும்.
தோனி என்ன செய்யப் போகிறார்?
தற்போது இரண்டு மாதம் அணியில் இருந்து விலகி இருக்கும் தோனி, அடுத்து ஓய்வை அறிவிப்பார் என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ, தோனி, வேறு ஏதோ திட்டம் போடுகிறார். இல்லையென்றால் ஏன் ஓய்வை தள்ளிப் போட வேண்டும் என்கிறார்கள்.