தேசிய அணியில் பங்கேற்க கோரிக்கை
என்சிஏ தலைவராக உள்ள முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தேசிய அணியில் பங்கேற்று இந்திய வீரர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அதை அவர் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதை நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
டிராவிட் வீரர்களுக்கு பயற்சியளிக்க வேண்டும்
இந்நிலையில் ராகுல் டிராவிட்டை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்க்கார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா சூழலுக்கு ஏற்ப பந்துகளை எதிர்கொள்ள அணி வீரர்களுக்கு டிராவிட்டை விட சிறப்பாக யாரும் பயிற்சி அளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
ராகுல் சேவை தேவை
விராட் கோலி இல்லாமல் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ள சூழலில், டிராவிட்டின் சேவையை பிசிசிஐ சிறப்பான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வெங்சர்க்கார் கூறியுள்ளார். உடனடியாக அவரை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பினால் அவர் குவாரன்டைனை முடித்துக் கொண்டு 3வது போட்டியிலருந்து அணியை வழிநடத்துவார் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சிறப்பான டிராவிட்
கடந்த 2003ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி கொள்ள டிராவிட் அவுட்டாகாமல் அடித்த 233 மற்றும் 72 ரன்கள் பெரிதும் உதவி புரிந்தன. அந்த தொடரில் 3 அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் 619 ரன்களை டிராவிட் குவித்தார். இதன் சராசரி 123.8. இதுவரை 16 போட்டிகளை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடியுள்ள டிராவிட் 1166 ரன்களை குவித்துள்ளார்.