தேர்வுக்குழு தலைவர் மனம்திறப்பு
டெஸ்ட் போட்டிகளை காண சாதாரண ரசிகனையும் வரவழைக்க வைக்கும் சிறந்த கண்டுபிடிப்பாக பிங்க் பால் போட்டிகளை தான் கருதுவதாக தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இன்று பிரமாண்ட துவக்கம்
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பகலிரவு டெஸ்ட் போட்டி பிங்க் பாலில் விளையாடப்படுகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இந்த போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் போட்டிகளை காண காத்துள்ளனர்.
ரசிகர்கள் மிகுந்த உற்சாகம்
இந்தியாவில் முதல் முறையாக விளையாடப்பட உள்ள இந்த பகலிரவு போட்டியை காண ஆன்லைனில் டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துள்ள நிலையில், ஈடன் கார்டன் மைதானத்தில் டிக்கெட்டிற்காக 3வது மற்றும் 4வது நுழைவு வாயிலில் மேலும் ரசிகர்கள் காத்துள்ளனர்.
விராத் கோலி விளக்கம்
இதனிடையே, பிங்க் பால் போட்டிகள் தொடர்ந்து விளையாடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, பொழுதுபோக்கிற்காக டெஸ்ட் போட்டிகளின் வசீகரத்தை இழந்துவிடக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதெல்லாம் பொழுதுபோக்கிற்காக ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்றும் அவர் கூறியுள்ளார்.
கைகளுக்கு பாதகம்
இந்திய மற்றும் வங்கதேச அணிகளின் கேப்டன்கள் விராத் கோலி மற்றும் மோமினுள் ஹாக், விளக்கின் ஒளியில் ஆடப்படும் இந்த பிங்க் நிற பந்து வீரர்களுக்கு மிகுந்த சவாலை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். சாதாரணமாக கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பந்துகளைவிட இவை கனமானவை என்பதால் கைகளில் கடுமையாக தாக்கும் என்றும் கூறியுள்ளனர்.
தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்கார்
இதனிடையே பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி பேசிய தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்கார், இனிவரும் காலங்களில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் பிங்க் பாலில் நடத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
விளக்கமான வரைபடம் கிடைக்கும்
பிங்க் பந்துகளில் விளையாடப்படும் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிகள் முழுமையாக முடிவடைந்த பின்பே அதன் சாதக பாதகங்கள் குறித்து விளக்கமான வரைபடம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெங்சர்க்கார் ஆலோசனை
இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், அந்த நாட்டின் சூழலுடன் ஒத்துப் போகின்றனர். இதேபோல பிங்க் பந்துகளுக்கும் அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.
சிறந்த டெஸ்ட் அனுபவத்தை பெறலாம்
மேலும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த தரமான பிட்சுகளை அமைப்பதன்மூலம், பாலுக்கும் பேட்டிற்கும் இடையில் சிறந்த போட்டி நிலவும். இதனால் டெஸ்ட் போட்டிகள் மேலும் சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கும். அவர்கள் அதிமான அளவில் டெஸ்ட் போட்டிகளை காண மைதானத்திற்கு வருவார்கள் என்றும் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.