நெல்லை: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹரி நிஷாந்த் 17 ரன்களும், ஜெகதீசன் 53 ரன்களும் அடித்து வெளியேறினர். பின்னர் வந்த கேப்டன் அஸ்வின் 28 பந்துகளில் 3 சிக்சர்கள் உட்பட 52 ரன்கள் விளாசினார். இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
ஆஸி.யை ஆஷஸ் தொடரில் தட்டி தூக்க வெயிட்டிங்கில் இங்கிலாந்து.. அந்த வீரரும் சர்ப்ரைஸ் எண்ட்ரி
தூத்துக்குடி அணி தரப்பில் தமிழ் குமரேசன், மூர்த்தி மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 174 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தூத்துக்குடி அணியின் தொடக்க வீரர்கள் அக்ஷய் ஸ்ரீனிவாசன் 16 ரன்னிலும், செந்தில் நாதன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்கள் திண்டுக்கல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஓரளவு நிலைத்து நின்று ஆடிய நாதன் அதிகபட்சமாக 38 ரன்களை சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
இறுதியில் அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் தூத்துக்குடி பேட்ரியாட்சை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று, ஹாட்ரிக் வெற்றியை பெற்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.