நெல்லை: காரைக்குடி அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி பெற்றது.
நெல்லையில் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளைகள் மோதின. டாஸ் வென்ற காரைக்குடி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் அனிருதா மற்றும் சூர்ய பிரகாஷ் களமிறங்கினர். சூர்ய பிரகாஷ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் 59 பந்துகளில் 7 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் என 98 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள், திண்டுக்கல் அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இறுதியில் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணி தரப்பில் ரோகித் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது திண்டுக்கல். தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த ஹரி நிஷாந்த், ஜெகதீசன் காரைக்குடி வீரர்களின் பந்துவீச்சை வெளுத்தனர்.
இருவரும் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசினர். ஹரி நிஷாந்த் 56 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 81 ரன்கள் விளாசினார். ஜெகதீசன் 47 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 78 ரன்கள் அடித்தார்.
அதனால் திண்டுக்கல் அணி 3 ஓவர்கள் மீதம் வைத்து, 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் அடித்தது. இதன் மூலம் காரைக்குடி அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது.