அடுத்தடுத்து விக்கெட்
கடந்த போட்டியில் அரைசதம் விளாசிய தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்வாட், இந்த ஆட்டத்தில் தேவையில்லாத ஷாட் ஆடி 5 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, இரண்டாவது பந்தில் பெவிலியன் திரும்பினார். ஒரு அளவுக்கு தாக்கு பிடித்த இஷான் கிஷன் 26 பந்துகளில் 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
பண்ட் மீண்டும் ஏமாற்றம்
இதன் மூலம் இந்திய அணி 6.1வது ஓவரில் 40 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ரிஷப் பண்டும், ஹர்திக் பாண்டியாவும் இறங்கினர். ரிஷப் பண்ட் டெஸ்ட் இன்னிங்சில் ஆடுவது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்களில் வெளியேறி காலை வாரினார்.
தினேஷ் கார்த்திக் அதிரடி
இதனையடுத்து பொறுப்பு அனைத்தும், ஹர்திக் மற்றும் தினேஷ் கார்த்திக் தலையில் விழுந்தது. முதலில் இருவரும் பொறுமையாக ஆடினாலும் பின்னர் அதிரடி காட்டினர். குறிப்பாக தினேஷ் கார்த்திக் பவுண்டரிகளாக விளாசி தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி அளித்தார். 26 பந்துகளை எதிர்கொண்ட கார்த்திக், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
கடைசி 5 ஓவர்
வழக்கம் போல் அதிரடி காட்டிய ஹ்ர்திக் பாண்டியா 3 பவுண்டரிகள், 3 சிக்சர்களை விளாசி, 31 பந்துகளில் 46 ரன்களை விளாசினார். இறுதியில் அக்சர் பட்டேல் 8 ரனகள் அடிக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. முதல் 10 ஓவரில் இந்திய அணி 56 ரன்களே அடித்த நிலையில் கடைசி 5 ஓவரில் மட்டும் 73 ரன்களை இந்தியா விளாசியது.