கரீபியன் பிரீமியர் லீக் தொடர்
கரீபியன் பிரீமியர் லீக் எனும் வெஸ்ட் இண்டீஸ்-இன் டி20 தொடரின் போது, டரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி ஆடிய போட்டியின் இடையே ஒளிபரப்பான காட்சியில் தினேஷ் கார்த்திக் காணப்பட்டார்.
உடை மாற்றும் அறையில்..
டரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உடை மாற்றும் அறையில் அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குல்லம் உடன் தினேஷ் பேசிக் கொண்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.
கேள்விகள்
தினேஷ் கார்த்திக் அந்த அணியுடன் என்ன செய்கிறார்? என்ற கேள்வி உடனடியாக பரவியது. தினேஷ் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள் நடத்தி வரும் அணி தான் டரின்பாகோ நைட் ரைடர்ஸ் என்பதை தாண்டி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அந்த அணியின் உடை
அந்த புகைப்படத்தில் அந்த அணியின் உடையை வேறு அணிந்து இருந்தார் தினேஷ். பிசிசிஐ அனுமதி இல்லாமல் எந்த கிரிக்கெட் தொடரிலும் இந்திய வீரர்கள் விளையாடக் கூடாது. எந்த வகையிலும் பங்கேற்கவும் கூடாது.
பிசிசிஐ நோட்டீஸ்
இந்த நிலையில் தான் தினேஷ் கார்த்திக்குக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பிசிசிஐ. எப்படி எங்கள் அனுமதி இல்லாமல், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றீர்கள்? என கேட்டு இருந்தது பிசிசிஐ.
தினேஷ் மன்னிப்பு
அதற்கு பதில் கடிதம் எழுதிய தினேஷ் கார்த்திக், தான் அனுமதி பெறாமல் சென்றதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறி இருந்தார். மேலும், தான் எந்த வகையிலும் போட்டியிலோ, அந்த அணிக்காகவோ பங்கேற்கவில்லை என விளக்கம் கூறி இருந்தார்.
காரணம் இவர் தான்
பிரெண்டன் மெக்குல்லம் அழைப்பின் பேரிலேயே தான் அந்த தொடருக்கு சென்றதாகவும், அவர் கேட்டுக் கொண்டதால் தான் அந்த அணியின் உடையை அணிந்து கொண்டதாகவும் கூறி இருந்தார் தினேஷ் கார்த்திக்.
பிசிசிஐ முடிவு
இந்த விவகாரத்தில் பிசிசிஐ என்ன முடிவு எடுத்தது? என்ற கேள்விக்கு ஒரு பிசிசிஐ அதிகாரி பதில் அளித்துள்ளார். "பிசிசிஐ தினேஷ் கார்த்திக்கின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டது. அந்த விஷயத்தை நாங்கள் மூடி விட்டோம்" என பதில் அளித்தார்.
எளிதாக தப்பினார் தினேஷ்
தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் இடம் பெறாத வீரர் என்பதால் இந்த விவகாரத்தில் எளிதாக தப்பி இருக்கலாம் என கருதப்படுகிறது. கடைசியாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற தினேஷ் கார்த்திக், இனி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்றே தெரிகிறது.