தீபக் ஹூடா
தற்போது தீபக் ஹூடாவை இந்திய அணி நிர்வாகம் பினிஷர் ரோலில் பயன்படுத்தி வருகிறது. ஆனால் தீபக் ஹூடா, இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 41 ரன்கள் அடித்தார். அதன் பிறகு 9,4 ,10 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், பேட்டிங் வரிசையில் 5 ,6 மற்றும் ஏழாவது இடத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது என்பது கடினமான காரியம். தீபக் ஹூடா பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் தான் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.
பெரிய சவால்
ஆனால் சில காரணங்களால் அணி நிர்வாகம் அவரை அந்த இடத்தில் களம் இறக்காமல் ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் விளையாட வைக்கிறார்கள். இது நிச்சயம் அவருக்கு பெரிய சவாலாக இருக்கும். அவருடைய ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எல்லாம் அவர் நடுவரசையில் விளையாடி பெரிய அளவில் ரன் சேர்க்காமல் இருந்தார். ஆனால் டாப் ஆர்டருக்கு சென்று விளையாட வாய்ப்பு கிடைத்ததும் தன்னுடைய ஆட்டத்திறனை அவர் முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜித்தேஷ் சர்மா
பேட்டிங் பவர் பிளேவில் தீபக் ஹூடா அதிரடியாக ஆடக்கூடியவர். எதிரணிக்கு நெருக்கடி தர கூடிய வீரராக விளங்குகிறார். ஆனால் தற்போது அவரை மீண்டும் கீழ் வரிசையில் களம் இறக்குகிறார்கள். இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதுவே ஜித்தேஷ் சர்மாவை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அவர் நம்பர் ஆறாவது வரிசையில் அதிரடியாக விளையாடி தனது திறமையை நிரூபித்திருக்கிறார். அவர் கிரிக்கெட் விளையாடுகிற தொடக்க காலத்தில் இருந்து நம்பர் ஆறாவது வரிசையில் தான் களமிறங்குகிறார்.
பினிஷர் ரோல்
நெருக்கடியான கட்டத்தில் அதிரடியாக விளையாடி பழக்கப்பட்டவர். இது போன்ற சூழலை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்பவர். ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்காகவே தன்னை ஜித்தேஷ் சர்மா தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார். ஆனால் நடப்பு தொடரில் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை. என்னை கேட்டால் தீபக் ஹூடா நம்பர் மூன்றாவது வரிசையில் களம் இறக்கி , ஜித்தேஷ் சர்மாவை பினிஷர் ரோலில் பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
மாற்றம் தேவை
இஷான் கிஷன் தொடக்க வீரராக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அல்லது ராகுல் திருப்பாதியை பயன்படுத்திவிட்டு ஜித்தேஷ் சர்மாவை நடுவரிசையில் களம் இறக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் மறைமுகமாக யோசனை தெரிவித்துள்ளார் இதேபோன்று தொடக்க வீரர் இடத்துக்காக பிரித்விஷா அணியில் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.