தேர்வில் அதிர்ச்சி
உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் சரியாக ஆடவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம். ஆனால், அதே உலகக்கோப்பை தொடரில் சரியாக ஆடாத இன்னொரு வீரருக்கு அணியில் இடம் கொடுத்து அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது தேர்வுக் குழு.
உலகக்கோப்பை சொதப்பல்
உலகக்கோப்பை தொடரில் சொதப்பலாக ஆடிய இரண்டு வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் கேதார் ஜாதவ். முதலில் கேதார் ஜாதவ் தொடர்ந்து அணியில் வாய்ப்பு பெற்று வந்தார். ஒரு போட்டியில் அரைசதம் அடித்தாலும் கூட அவரால் எளிதாக ரன் சேர்க்க முடியவில்லை என்பது விமர்சனத்துக்கு உள்ளானது.
எதிர்பார்ப்பு என்ன?
அதனால், அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். முக்கியமான அரையிறுதிப் போட்டியில் கூட ஆடும் வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக், தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்பிலும் அணியை கைவிட்டார். அதனால், தினேஷ் கார்த்திக் மற்றும் கேதார் ஜாதவ்விற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
வாய்ப்பு பெற்ற ஜாதவ்
ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் அணியில் கேதார் ஜாதவ் சேர்க்கப்பட்டு இருந்தார். பலருக்கும் இது ஆச்சரியம் அளித்தது. இவர் சரியாக ஆடவில்லை என பாதி உலகக்கோப்பை போட்டிகளுக்கு பின்னர் அவருக்கு களமிறங்க வாய்ப்பு தரவில்லை கேப்டன் கோலி. பின்னர் ஏன் அவரை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்கிறார்கள்? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.
தினேஷ் கார்த்திக் நீக்கம்
ஆனால், தினேஷ் கார்த்திக் மட்டுமே நீக்கப்பட்டு இருந்தார். இவரது நீக்கம் குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்றாலும், இவரைப் போன்றே உலகக்கோப்பை தொடரில் சரியாக ஆடாத ஜாதவ்வுக்கு மட்டும் ஏன் அணியில் இடம் கொடுத்தார்கள்? இது என்ன லாஜிக்? என்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.
இளம் வீரர்களுக்கு வழி
இது குறித்து கேட்ட போது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி இந்த முடிவை எடுத்தோம். ஜாதவ்வை நீக்கும் அளவுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றார் தேர்வுக் குழு தலைவர் பிரசாத். "அதற்கு இதில் பதில் கிடையாதே" என இம்சை அரசன் படத்தில் வடிவேலு சொல்லும் டயலாக் தான் ஞாபகம் வருகிறது.