ரிஷப் பண்ட் கொரோனா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு, இங்கிலாந்து தொடருக்கும் ஒன்றரை மாதங்கள் இடைவெளி இருந்ததால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு 10 நாட்கள் பயோ-பபுள் விதிகளில் இருந்து விடுமுறை கொடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் பல இடங்களை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தான், யூரோ கால்பந்து போட்டியை காணச் சென்ற ரிஷப் பண்ட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ரிதிமான் சாஹா
இப்போது இங்கிலாந்தில் உள்ள உறவினர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பண்ட், வரும் 18ம் தேதி டுர்ஹாம் செல்லும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியுடன் பயணிக்க மட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்திய அணியின் throwdown specialist தயானந்த கராணி என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் நெருக்கமாக இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், மற்றொரு விக்கெட் கீப்பர் ரிதிமான் சாஹா உட்பட மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களும் வரும் 18ம் தேதி இந்திய அணியின் பயோ-பபுளில் இணையமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தினேஷ் கார்த்திக் சிக்னல்
இதனால், இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இரண்டு விக்கெட் கீப்பர்களும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இங்கிலாந்தில் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், தான் விக்கெட் கீப்பராக செயல்பட தயார் என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மறைமுகமாக, தனது கிரிக்கெட் கிட் Bag-ஐ புகைப்படம் எடுத்து, #justsaying எனும் ஹேஷ்டேக்குடன் அதனை பதிவிட்டுள்ளார்.
சீரியஸ் டிஸ்கஷன்
ரிஷப் பண்ட் மற்றும் ரிதிமான் சாஹா, முதல் போட்டிக்கு தயாராகாத பட்சத்தில் லோகேஷ் ராகுல் கைகளில் தான் கிளவுஸை மாட்டிவிட வேண்டிய சூழல் ஏற்படும். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த தினேஷ் கார்த்திக், "நான் ரெடி பாஸ்" என்று சொல்லாமல் சொல்ல, அவரது டீவீட்டை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். பலரும், இதை சீரியஸாகவே டிஸ்கஷன் செய்து வருகின்றனர்.