இந்திய அணி
டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி கடந்த சில வருடங்களாக மிகவும் பலமான ஒன்றாக உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என வீரர்கள் ஃபுல் ஃபார்மில் உள்ளனர். கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலிய, இங்கிலாந்து தொடர்கள் மிகவும் முக்கியமானவைகள் ஆகும். இந்த தொடர்களில் இந்திய அணி வெற்றிப்பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையும் என்ற நிலை இருந்த சூழலில் இளம் வீரர்கள் அதனை நிறைவேற்றிக் கொடுத்தனர்.
அதிரடி ஃபார்ம்
நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பெறாது இருந்த பண்ட், ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து தொடர்களில் அதிரடி ஆட்டம் மூலம் வெற்றி பெற்றுக்கொடுத்தார். ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 5 போட்டிகளில் 274 ரன்களை குவித்தார். அவரின் சராசரி 68.50 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டி தொடரில் 270 ரன்கள் அடித்தார். அந்த தொடரில் இந்திய அணியில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். இவர் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
ஒப்பீடு
இந்நிலையில் ரிஷப் பண்ட், சேவாக்கை போன்றவர் என இந்திய அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் மற்றும் நம்பிக்கை பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உள்ளார். இதனால் அணிக்கு எக்ஸ்ட்ராவாக பேட்ஸ்மேன் அல்லது பவுலர் சேர்க்க முடிகிறது. அவரிடம் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால் பண்ட்-ன் ஆட்டம் எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதில் விரேந்திர சேவாக் மற்றும் கில்கிறிஸ்ட்-ன் தாக்கம் உள்ளது.
சீனியர் வீரர்கள் ஆதரவு
ரிஷப் பண்ட்-க்கு பக்கபலமாய் விருதிமான் சாஹா அணியில் உள்ளார். என்னைப்பொறுத்தவரை சஹா உலகின் தலை சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர். அவர் தற்போது ரிஷப் பண்ட்-க்கு எப்போது வேண்டுமானாலும் உதவ தயாராக உள்ளார். ஆஸ்திரேலிய தொடரின் போது பார்த்தீவ் பட்டேல் கூட பண்ட்-க்கு உதவியாக இருந்தார். இது பண்ட்-க்கு சிறப்பான விஷயம் ஆகும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.