டெல்லி: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் காயமடைந்துள்ள மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.
மினி உலக கோப்பையாக கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடர் வரும் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் 'டாப் 8' நாடுகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியனான இந்திய அணி 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது.. பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணி கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, ரஹானே, யுவராஜ் சிங், டோணி, கேதர் ஜாதவ், ஹார்திக் பாண்டியா, அஷ்வின், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், மனிஷ் பாண்டே, பூம்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த இளம் பேட்ஸ்மேன் மணிஷ் பாண்டே, நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். காயம் குணமடையாததால் அவர் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இதனால், அவர் வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.