என்ன செய்தார்?
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் உடை மாற்றும் அறையில் இருந்தார் தினேஷ் கார்த்திக். அந்த தொடரின் நேரலையின் போது, தினேஷ் கார்த்திக் அங்கே இருப்பதை சில வினாடிகள் காட்டினர்.
என்ன புகைப்படம்?
அந்த வீடியோ காட்சியில் தினேஷ் கார்த்திக் இருந்ததை புகைப்படமாக மாற்றி இணையத்தில் பரப்பினர் ரசிகர்கள். தினேஷ் கார்த்திக் வெளிநாட்டு டி20 தொடரில் என்ன செய்கிறார்? அந்த தொடரில் பங்கேற்க பிசிசிஐ அனுமதி அளித்ததா? என்றும் சிலர் கேட்டு இருந்தனர்.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன். அந்த அணியின் உரிமையாளர்கள் தான் ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள். அதனால், அவர் அங்கே சென்று இருக்கலாம் என்பது மட்டுமே ரசிகர்கள் அளவில் பேசப்பட்டு வந்தது.
உடன் இருந்தவர்கள்
அந்த புகைப்படத்தில் ட்ரின்பாகோ அணியின் பயிற்சியாளர் மெக்குல்லம் உடன் தினேஷ் கார்த்திக் பேசிக் கொண்டு இருந்தார். அவரே தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவருடன் தினேஷ் கார்த்திக்கின் நண்பரும், டரின்பாகோ அணியின் உதவி பயிற்சியாளருமான அபிஷேக் நாயரும் உடன் இருந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திட்டம்
இவர்கள் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறித்த திட்டங்களை பற்றி பேசி இருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ஐந்தாம் இடம் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
என்ன சர்ச்சை?
இந்திய வீரர்கள் மற்ற விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முன் பிசிசிஐயிடம் அனுமதி பெற வேண்டும். அதே போல, ஐபிஎல் தவிர வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடவும் இந்திய வீரர்களுக்கு அனுமதி இல்லை, யுவராஜ் சிங்கிற்கு மட்டுமே சிறப்பு அனுமதி கிடைத்தது.
உடையால் மேலும் சிக்கல்
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அந்த டி20 தொடரில் விளையாடவில்லை என்றாலும், ட்ரின்பாகோ அணியின் உடை மாற்றும் அறையில் அந்த அணியின் உடையை அணிந்து கொண்டு இருந்தார். அது தான் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
பிசிசிஐ நோட்டீஸ்
தினேஷ் கார்த்திக் பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தை மீறி கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றதற்காக பிசிசிஐ அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தினேஷ் கார்த்திக் சாதாரண உடையில் இருந்திருந்தால், இத்தனை சிக்கல் ஏற்பட்டு இருக்காது.
தடை விதிக்கப்படலாம்
தினேஷ் கார்த்திக் பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அதிக பட்சமாக தினேஷ் கார்த்திக்குக்கு சில மாதங்கள் அல்லது வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம். அல்லது மன்னிப்பு கேட்டுக் கொண்டால் அதை ஏற்று அவரை விடுவிக்கலாம்.