வாரி வழங்கிய பவுலர்கள்
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 2வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 3வது டி20 போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று விருந்தாளியை வாஷ் அவுட் செய்திருக்கிறது இங்கிலாந்து. இதில், நேற்று (ஜூன்.26) நடந்த கடைசி டி20 போட்டி வேற ரகம். முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. டேவிட் மலன் அதிகபட்சமாக 76 ரன்களும், பேர்ஸ்டோ 51 ரங்களும் எடுத்தனர். இலங்கையில் இசுறு உடானா வீசிய 4 ஓவரில் 55 ரன்கள் விளாசப்பட, நான் என்ன சும்மாவா என்று 3 ஓவரில் 42 ரன்களை வாரி வழங்கினார் ஹஸரங்கா.
இப்போ இப்படி ஆச்சே
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, ஏற்கனவே தொடரை இழந்துவிட்டதால், இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே, நிச்சயம் ஒரு காட்டு காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்களும் நல்லாவே காட்டினார்கள். வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பளிச் பளிச் என்று அதகளம் புரிந்தார்கள். 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை என்று இரு கோப்பைகளை வென்ற அணி அது. ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா, அட்டப்பட்டு, சங்கக்காரா, ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன் என்று மாபெரும் லெஜெண்ட்களை கொண்டு, உலக அணிகளை மிரட்டி வந்த இலங்கையின் நிலைமை இன்று எவ்வளவு மோசமாக செல்ல முடியுமோ அவ்வளவு மோசமாக சென்றுவிட்டது.
ஒரு கோப்பை கூட
கடந்த 5 ஆண்டுகளில் அவர்கள் கைப்பற்றிய கோப்பைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். 2014க்கு பிறகு, கடந்த 6 ஆண்டுகளாக அவர்கள் எந்த ஐசிசி கோப்பைகளையும் வெல்லவில்லை. சமீபத்தில் வங்கதேசம் சென்று அந்த அணிக்கு எதிராக கூட தொடரை இழந்த இலங்கை, இப்போது இங்கிலாந்துக்கு எதிராக வாஷ் அவுட் ஆகியிருக்கிறது. இவர்கள் தோற்பதை விட, எந்தவித போராட்டமும் இன்றி சரண்டராவது தான் ரசிகர்களை அதிகம் கோபம் கொள்ளச் செய்கிறது.
unfollow
இந்நிலையில், அதிருப்தியின் உச்சிக்கே சென்ற இலங்கை ரசிகர்கள், ஏமாற்றம் காரணமாக தங்கள் கிரிக்கெட் வீரர்களை சமூக ஊடகங்களில் Unfollow செய்வதற்கான பிரச்சாரத்தை தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் சொந்த நாட்டின் வீரர்களை பின்தொடர்வதை நிறுத்தப்போகிறோம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
உடனடி நடவடிக்கை
முன்னதாக, இங்கிலாந்தில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து, முன்னாள் இலங்கை அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா தனது ட்விட்டரில், "இலங்கை கிரிக்கெட்டுக்கு மிக மோசமான நாள். நிலைமை மிகவும் இக்கட்டான நிலைமைக்கு சென்றுவிட்டது. இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்ற, நாம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.