சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சச்சினுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த மார்ச் 27ம் தேதி கொரோனா உறுதியானது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், தனக்கு கொரோனா உறுதியானதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டு தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி கடந்த சில தினங்களாக வீட்டு தனிமையில் இருந்த நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு குறைந்தது ஒரு வார காலம் இருப்பார் எனக்கூறப்படுகிறது. இது குறித்து ட்வீட் செய்திருந்த சச்சின், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கு நன்றி எனவும் தான் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சச்சின் நலமுடன் மீண்டு வர வேண்டும் என பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சச்சினுக்காக பதிவிட்டுள்ள ட்வீட்டில், கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர் விரைவில் நலமடைய வாழ்த்துகிறேன். நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தொற்று பரவாதவாறு விழிப்புடண் இருக்க வேண்டும். அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். தேர்தல் பணிகளின் போதும் ஸ்டாலின் சச்சினுக்காக அக்கறை செலுத்தியுள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது.