முதல் போட்டியில் தோற்ற இந்தியா
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் வெல்லிங்டனில் முடிவுற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா, சர்வதேச ஒருநாள் தொடரை விட்டுக் கொடுத்துள்ளது.
கேப்டன் விராட் கோலி விளக்கம்
இந்நிலையில், ஐசிசி சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்தில் உள்ள இந்தியா இந்த போட்டியில் தோற்க முக்கிய காரணம் அணியின் பேட்டிங் ஆர்டர் சரியில்லாததே என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். போட்டியின் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஒரு போட்டியில் தோற்றால், உலகமே முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை என்றும் காட்டம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து
இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் சென்ஸ் இல்லாத இந்திய அணி வீரர்களின் தேர்வே என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் குற்றம் சாட்டியுள்ளார். ஒரே நேரத்தில் அணியில் ஏன் இவ்வளவு மாற்றங்கள் என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
வீரர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்
இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் புதிய அணி உருவாக்கப்படுவதாகவும், அணியில் உள்ள யாருமே நிரந்தரமாக இல்லை என்றும் கூறியுள்ள கபில்தேவ், வீரர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல், இருந்தால், அது அவர்களின் ஆட்டத்தை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.
200 ரன்கூட அடிக்கவில்லை
விராட் கோலி, சத்தீஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே போன்ற சர்வதேச அளவிலான வீரர்கள் அணியில் இருந்தும், இரண்டு இன்னிங்சிலும் 200 ரன்கள் கூட அடிக்க முடியாத சூழல் இருந்தால், வெற்றி எப்படி சாத்தியப்படும் என்று கேள்வி எழுப்பிய கபில்தேவ், அணியில் சிறப்பான முறையில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
"அவர் ஏன் அணியில் இல்லை?"
கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டங்களை பதிவு செய்துவரும் நிலையில், அவரை டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கி வெளியில் உட்கார வைத்ததில் எந்த சென்சும் இல்லை என்றும் கபில்தேவ் தெரிவித்துள்ளார். தன்னை பொருத்தவரை சிறப்பான வீரர்கள் தொடர்ந்து விளையாட வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கபில்தேவ் பாராட்டு
இந்த டெஸ்ட் போட்டியில் மட்டுமின்றி, கடந்த சர்வதேச ஒருநாள் தொடரின் 3 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதாக கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று முடிவுற்றுள்ள டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர்களின் ஆட்டம் மிகவும் சிறந்து விளங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.