2008ல் ஓய்வு
இந்திய அணியின் சிறப்பான ஸ்பின்னராக திகழ்ந்த அனில் கும்ப்ளே, கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருக்கும் கும்ப்ளே, பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.
619 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை
இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் முறையே 800 மற்றும் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1999ல் நடைற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை ஒரே நபராக வீழ்த்திய சாதனையும் இங்கிலாந்தின் ஜிம் லேக்கருக்கு அடுத்தபடியாக கும்ப்ளேவிற்கு உள்ளது.
வார்னேவுடன் ஒப்பீடு குறித்து கேள்வி
இந்நிலையில், முன்னாள் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் பொம்மி ம்பாங்வாவுடன் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் ஈடுபட்ட அனில் கும்ப்ளே, தன்னை ஷேன் வார்னேவுடன் ஏன் மற்றவர்கள் ஒப்பிடுகிறார்கள் என்று தனக்கு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார். வார்னேவின் ஆட்டம் முற்றிலும் வித்தியாசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சி அளிக்கிறது
முரளிதரன் மற்றும் வார்னே இருவரும் எந்த பிட்சிலும் எளிதாக பந்துவீசுவார்கள் என்றும் அது தனக்கு கடினமானது என்றும் அனில் கும்ப்ளே மேலும் கூறினார். அவர்கள் இருவரின் ஆட்டத்தை பார்த்து தான் அதிகமாக கற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆயினும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியது தனக்கு எப்போதும் பெருமை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.