சில தினங்களில் துவக்கம்
ஐபிஎல் போட்டிகள் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் அந்த அணியில் இணைந்துள்ளனர். மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
அதிகமான கிரிக்கெட் மூளை
இந்த சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த உள்ளார். இந்நிலையில் அவரை இளம் கேப்டனாக பார்க்க வேண்டாம் என்றும் அவரிடம் அதிகமான கிரிக்கெட் மூளை உள்ளதாகவும் அந்த அணியை சேர்ந்த தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரீஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிறந்த கிரிக்கெட் வீரர்
அவருடன் தான் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளில் இணைந்து விளையாடியுள்ளதாகவும் இருவருக்குள்ளும் சரியான உறவு உள்ளதாகவும் மோரீஸ் மேலும் கூறியுள்ளார். அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறப்பான விக்கெட் கீப்பராக விளங்கும் சாம்சன், வித்தியாசமான கோணங்களில் பந்தை அணுகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தயாராக உள்ளதாக அறிவிப்பு
அவர் சிறப்பான ஐடியாக்களுடன் அணியை வழிநடத்துவார் என்றும் மோரீஸ் குறிப்பிட்டுள்ளார். அவர் போட்டிகளை மிகவும் சீரியசாக அணுகுவார் என்றும் புதிய கேப்டனின்கீழ் விளையாட தான் காத்திருப்பதாகவும் அவருக்கு 100 சதவிகித ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.