கொரோனா வைரஸ் பாதிப்பு
2020ஆம் ஆண்டு துவக்கம் முதல் கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் துவங்கியது. பின் உலக நாடுகளுக்கும் அந்த வைரஸ் வேகமாக பரவத் துவங்கியது. இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட உலகம்
உலகம் முழுவதும் வெளிநாட்டு போக்குவரத்து பெரிதாக தடைபட்டது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். அந்த சூழ்நிலையிலும், ஜப்பான் ஒலிம்பிக் தொடரை நடத்துவதில் உறுதியாக இருந்தது.
ஓராண்டு தள்ளி வைப்பு
பின்னர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிய நிலையில், ஜப்பான் அரசு டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ஓராண்டு தள்ளி வைக்கும் முடிவை எடுத்தது. 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் பாராட்டு
இந்த தள்ளி வைப்பு குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு தொலைபேசியில் பேசி விளக்கம் அளித்து இருக்கிறார். அப்போது பேசிய டிரம்ப் ஒலிம்பிக் தொடரை தள்ளி வைக்கும் முடிவை பாராட்டி உள்ளார்.
புத்திசாலித்தனமானது என்றார்
இது குறித்து ஜப்பான் கேபினட் செயலாளர் அகிரோ நிஷிமுரா கூறுகையில், "டிரம்ப் பேசும் போது மீண்டும், மீண்டும் தொடரை தள்ளி வைக்கும் முடிவு சிறப்பானது மற்றும் புத்திசாலித்தனமானது என கூறினார். பிரதமர் அபேவின் முடிவுக்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறினார்" என்றார்