சண்டை இழுத்த மிட்சல்
அந்தத் தொடர் முழுவதும் கோலியை கடுமையாக சீண்டி வாய்ச் சண்டையில் ஈடுபட்டிருந்தார் வேகப் பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன். இதனால் மிட்சல் ஜான்சன் பந்துகளைக் குறி வைத்து வெளுத்தெடுத்தார் கோலி. இதைத்தான் லத்தீப் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தொடரில் தோனி 2 டெஸ்ட் போட்டிகளுடன் ஓய்வை அறிவித்தார். இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் கோலி கேப்டனானார். அதில் இரண்டு சதம் அடித்தார் கோலி. இதற்கு முக்கியக் காரணமே மிட்சல் ஜான்சனின் வாய்ச் சவடால்தான்.
அடித்து நொறுக்கிய கோலி
மிட்சல் ஜான்சன் தேவையில்லாமல் பேசியபோதெல்லாம் அதற்கு சரியான பதிலடியை பேட் மூலமாக உடனுக்குடன் கொடுத்தார். இதை வீடியோவில் பார்க்கலாம். அந்த அளவுக்கு ஜான்சன் பந்துகளை நொறுக்கினார் கோலி. அவர் பதுங்கிப் போகவே தயாரில்லை. பாய்ந்து பாய்ந்து அடித்தார். ஆனால் உண்மைக்குப் புறம்பாக தற்போது மைக்கேல் கிளார்க்கின் புகார்கள் வந்துள்ளன.
பொய் பேசுகிறார் கிளார்க்
கோலியின் தயவு தேவை என்பதால்தான் அவரை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்டவில்லை என்று கூறியிருப்பது அபத்தமாக இருக்கிறது. கிளார்க் பேசுவதில் உண்மை இல்லை. சில வீரர்களிடம் நீங்கள் வம்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மியான்தத், விவ் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் போன்றோர் சிலர். அதில் கோலியும் உண்டு. இதேபோலத்தான் 2017ல் ஜமைக்காவில் நடந்த டி20 போட்டியின்போது பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ், கோலியை சீண்டினார்.
தேவையில்லாமல் பேசாதீங்க
அந்தப் போட்டியில் 208 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான இலக்கு. ஆனால் 8 பந்துகள் மீதம் வைத்து இந்தியா அபார வெற்றி பெற்றது. கோலி 50 பந்துகளில் 94 ரன்களைக் குவித்தார். தன்னை சீண்டிய கெஸ்ரிக் பந்தில் சிக்ஸர் விளாசி அவரைப் போல இமிமேட் செய்து அதிரடியும் காட்டினார். எனவே கோலியை சீண்டாமல் இருந்தால் உங்களுக்குத்தான் நல்லதே தவிர.. அவருக்கு அதனால் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் லத்தீப்.