சாதனைகளின் மறு உருவம்
இந்திய கிரிக்கெட் உலகின் குறிப்பிடப்படும் நபர்களில் முதல் 10 இடங்களில் உள்ளவர் சச்சின் டெண்டுல்கர். இவர் தன்னுடைய 16வது வயதில் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை துவக்கி, பல்வேறு சாதனைகளை சொந்தமாக்கியவர்.
|
சச்சினின் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில் ஆண்கள் வார கொண்டாட்டத்தையடுத்து சர்வதேச அளவில் இன்றைய மற்றும் நாளைய ஆண்களுக்கு சச்சின் டெண்டுல்கர் ஒரு வெளிப்படையான கடிதத்தை எழுதியுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த கடிதத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
அழுகை ஆண்களை பலவீனப்படுத்தாது
அந்த கடிதத்தில் ஆண்கள் அழுவதற்கு வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காலங்காலமாக கூறப்படுவதை போல ஆண்கள் அழக்கூடாது என்பதில் எந்த உண்மையும் இல்லை என்று கூறியுள்ள அவர், அழுகை ஆண்களை பலவீனப்படுத்தும் என்ற கருத்தை மறுத்துள்ளார்.
தவறான வாதம்
ஆண்கள் அழக்கூடாது என்ற தவறான வாதத்தை நம்பியே தானும் வளர்ந்ததாகவும் ஆனால், இது தவறு என்பதை தான் தற்போது உணர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தன்னுடைய கவலைகள் மற்றும் போராட்டங்களே தன்னை சரியான மனிதனாக உருவாக்கியுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அழுகை வந்தால் அழுங்கள்...
கணவனாக, சகோதரனாக உள்ள அனைத்து ஆடவர்களுக்கும் தன்னுடைய ஆண்கள் வார செய்தியை தெரிவித்துள்ள சச்சின், ஒவ்வொரு ஆடவனுக்கும் தான் தோல்வியுறும் தருணம் வரும் என்றும் அந்தவேளையில் அழுகை வந்தால், அழுதுவிட்டு, அந்த கவலைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கடைசி ஆட்டத்தின்போது அழுகை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் தன்னுடைய கடைசி ஆட்டம் குறித்து பேசிய சச்சின், அந்த வேளை மிகவும் கடினமானதாக இருந்ததாக தெரிவித்துள்ளார். தன்னுடைய உணர்ச்சிகள் அனைத்தையும் உலகத்தின்முன்பு அழுகையினூடே தான் கொட்டியதாகவும், அதன்பின்பு தனக்கு மிகப்பெரிய அமைதி கிட்டியதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.