இங்கிலாந்து டெஸ்ட்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மிக முக்கியமாக பார்க்கப்படும் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11-ஐ இங்கிலாந்து அணி அறிவித்துவிட்ட நிலையில் இந்திய அணி இன்னும் குழப்பத்திலேயே உள்ளது. இதற்கு காரணம் ரோகித் சர்மாவின் உடல்நிலை, ஓப்பனிங் வீரருக்கான தேர்வு, பவுலிங் படை என பல பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்படாதது தான்.
இங்கிலாந்து திட்டம்
இந்நிலையில் இந்த போட்டியில் பயிற்சியாளர் டிராவிட்டிற்கு புதிய குழப்பம் வந்து சேர்ந்துள்ளது. அதாவது, இங்கிலாந்து அறிவித்துள்ள ப்ளேயிங் 11-ல் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை சேர்த்துள்ளது. ஒரு ஸ்பின்னர் கூட இடம் பெறவில்லை. ஒருவேளை தேவைப்பட்டாலும் கூட, ஜோ ரூட் பகுதி நேர ஸ்பின்னராக இருப்பார். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
பிட்ச் ரிப்போர்ட்
எட்ஜ்பாஸ்டன் களத்தை பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சு தான் எடுபடும். எனவே இந்திய அணி வழக்கமான 3 வேகப்பந்துவீச்சாளர்கள் + 2 ஸ்பின்னர்கள் என களமிறங்காமல், குறைந்த பட்சம் ஒரு ஸ்பின்னரை குறைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அப்படி பார்த்தால் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவா அல்லது ரவிச்சந்திரன் அஸ்வினா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டிராவிட்டிற்கு சிக்கல்
இந்திய அணிக்கு ஒரே ஒரு ஸ்பின்னர் தான் தேவை என்ற சூழல் வந்த போதெல்லாம், ஜடேஜாவுக்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளனர். கடந்தாண்டு இங்கிலாந்துடன் நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் கூட அஸ்வின் ஓரம் கட்டப்பட்டார். எனவே இந்த போட்டியிலும் ஜடேஜா இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் ஜடேஜா தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். மறுபுறம் அஸ்வின் பேட்டிங்கில் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார் என்பதால் டிராவிட்டிற்கு சிக்கல் உண்டாகியுள்ளது.