ஸ்ரேயாஸ் ஐயர்
ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி இளம் வீரர்களை தேர்வு செய்த போது அணியில் வாய்ப்பு பெற்றார். அதற்கு முன்பே அவர் இந்திய அணியில் ஆடி இருந்தாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.
சிறப்பாக ஆடி வந்தார்
பின் கடந்த ஆண்டு தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர், அணியில் சிக்கலாக இருந்த நான்காம் வரிசை பேட்டிங்கில் சிறப்பாக ஆடி நிரந்தர இடம் பெற்றுள்ளார். இந்திய அணியில் இடம் கிடைக்காத போது அவர் இந்தியா ஏ அணி மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார்.
அதிரடி ஆட்டம் ஆடினார்
தற்போது அணியில் பொறுப்பாக ஆடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், தன் துவக்க காலத்தில் அதிரடி ஆட்டம் ஆடி வந்தார். விக்கெட் போவதை பற்றி கவலைப்படாமல் எந்த சூழ்நிலையிலும் அதிரடி ஆட்டம் ஆடுவேன் என அடம்பிடித்து வந்துள்ளார்.
ராகுல் டிராவிட் முன்னிலையில்..
அப்படி ஒரு உள்ளூர் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் முன்னிலையில் அதிரடி ஆட்டம் ஆடி, அவரின் கண்டிப்புக்கு ஆளாகி இருக்கிறார். அதன் பின்னரே அவர் பொறுப்பான பேட்ஸ்மேன் ஆக முயற்சி எடுத்து மாறி இருக்கிறார்.
நாளின் கடைசி ஓவர்
இது பற்றி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசினார் ஸ்ரேயாஸ் ஐயர். "அது நான்கு நாள் போட்டி. ராகுல் டிராவிட் அப்போது தான் என்னை முதன் முதலாக பார்க்கிறார். அது முதல் நாளின் கடைசி ஓவர். நான் 30 ரன்கள் எடுத்து ஆடி வந்தேன் என நினைக்கிறேன்"
தடுப்பாட்டம் ஆடுவேன் என..
"அது கடைசி ஓவர் என்பதால் அனைவரும் நான் அந்த ஓவரில் ரன் எடுக்காமல் தடுப்பாட்டம் ஆடுவேன் என நினைத்தார்கள். நான் அந்த கடைசி ஓவரை கவனமாக ஆடி அந்த நாளை முடிப்பேன் என எண்ணினார்கள்"
காற்றில் பந்தை பறக்க விட்டேன்
"ராகுல் டிராவிட் அப்போது மைதானத்தின் உள்ளே தான் அமர்ந்து இருந்தார். அப்போது பந்துவீச்சாளர் மேலே வருவது போல பந்து வீசினார். நான் வெளியே காலை வைத்து, பந்தை காற்றில் பறக்க விட்டேன். அது சிக்ஸ் ஆனது."
ஓடி வந்தார்கள்
"உடை மாற்றும் அறையில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தார்கள். அவர்கள் மேலே (கேட்ச் பிடிக்கப்பட்டு விட்டதா? என) பந்தை பார்த்தார்கள். மேலும், கடைசி ஓவரை யார் இப்படி ஆடுவார்கள்? என அவர்கள் நினைத்தனர்."
என்ன பண்றீங்க?
"அன்று ராகுல் டிராவிட் நான் எப்படி ஆடுகிறேன் என கண்டு கொண்டார். அவர் என்னிடம் வந்தார். "பாஸ்.. நீங்க என்ன பண்றீங்க.. நாளின் கடைசி ஓவரில், இப்படி ஆடுவீர்களா? என்பது போல கூறினார். அதன் பின்பு தான் டிராவிட் என்னிடம் என்ன சொன்னார் என்பதை நான் புரிந்து கொண்டேன்" இவ்வாறு கூறினார் ஸ்ரேயாஸ் ஐயர்.
டிராவிட் பங்களிப்பு
டிராவிட்டின் அறிவுரைக்கு பின்னரே சிந்தித்து தன் அதிரடி ஆட்டத்தின் போக்கை மாற்றிக் கொண்டு இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். டிராவிட் இந்திய அணிக்கு பல சிறந்த இளம் வீரர்களை பட்டை தீட்டி கொடுத்துள்ளார். அதில் ஸ்ரேயாஸ் ஐயரும் இருக்கிறார் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.