வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்கள்
இந்தியாவில் தான் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். அதிலும் வெறித்தனமான ரசிகர்கள் அதிகம். அமைதியான வீரர்களில் ஒருவராக கருதப்படும் ராகுல் டிராவிட்டுக்கும் அப்படி ஒரு ரசிகை இருந்துள்ளார். அவரால் பெரிய சிக்கலில் மாட்டி தப்பித்த கதையை ஒரு பேட்டியில் டிராவிட் கூறினார்.
டிராவிட் வீட்டுக்கு வந்தார்
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி ஆடி வந்த துவக்க நாட்களில் இந்த சம்பவம் நடந்ததாக கூறினார் ராகுல் டிராவிட். அந்த ரசிகை ஹைதராபாத்தை சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டை பார்க்க வந்ததாக கூறி பெங்களூரில் இருக்கும் டிராவிட் வீட்டுக் கதவை தட்டி உள்ளார்.
பெற்றோர் ஆசை
அப்போது ராகுல் டிராவிட் பெற்றோர் தங்கள் மகனின் ரசிகர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால் உடனே உள்ளே விட்டு விடுவார்களாம். அவர்களுடன் தங்கள் மகன் பேச வேண்டும் என்பது அவர்களின் ஆசை. அதே போல, இந்த பெண்ணையும் வீட்டுக்குள்ளே விட்டுள்ளனர்.
காத்திருந்த ரசிகை
அப்போது ராகுல் டிராவிட் வெளிநாட்டு தொடர் ஒன்றில் பங்கேற்று அப்போது தான் வீடு திரும்பி இருந்தார். அதனால் மதியவேளையில் தூங்கி கொண்டு இருந்தார். எனவே, சுமார் ஒன்றரை மணி நேரம் அந்த ரசிகை அவர்கள் வீட்டிலேயே காத்துக் கொண்டு இருந்துள்ளார்.
ஆட்டோகிராப், புகைப்படம்?
டிராவிட் எழுந்த உடன் அவரது பெற்றோர் ஹைதராபாத்தில் இருந்து உன்னைப் பார்க்க ஒரு ரசிகை வந்துள்ளார் எனவும், ஒன்றரை மணி நேரமாக காத்துக் கொண்டு இருப்பதாகவும் கூறி உள்ளனர். டிராவிட் முதலில் அவர் ஆட்டோகிராப் அல்லது புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்துள்ளார் என நினைத்துள்ளார்.
அடம் பிடித்த ரசிகை
அந்த பெண்ணுடன் டிராவிட் பேசிய போது, அந்தப் பெண் நான் இங்கே இருந்து போக மாட்டேன். நான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன். நான் இங்கேயே தான் இருப்பேன்" என கூறி அடம் பிடித்துள்ளார். அப்போது தான் அவரது நோக்கம் என்ன என தெரிய வந்துள்ளது.
காவல்துறை உதவி
அந்த ரசிகை கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் டிராவிட். பின்னர் நீண்ட விவாதம் நடந்துள்ளது. என்ன செய்வது என்று தெரியாத நிலையில், இறுதியாக காவல்துறை உதவியை நாடி உள்ளார் டிராவிட். அதன் பின்னரே அந்தப் பெண் டிராவிட் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
விழித்துக் கொண்ட பெற்றோர்
அந்த சம்பவத்திற்கு பின் தான் தன் பெற்றோருக்கு இனி வீட்டுக்கு ரசிகர்கள் என யாரேனும் வந்தால் உள்ளே விடக் கூடாது என்ற விழிப்புணர்வை அளித்ததாகவும், அதற்கு முன் வரை ரசிகர்களை தன் பெற்றோர் வீட்டுக்குள் விட்டு விடுவார்கள் என அந்த பேட்டியில் கூறினார் ராகுல் டிராவிட்.