பெங்களூரு: கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது பழைய செய்தி. இதோ இந்திய அணிக்காக மற்றொரு வீரர் தயாராகிறார். இந்திய நெடுஞ்சுவர் ராகுல் டிராவிடின் மகன் சமித், உள்ளூர் போட்டிகளில் கலக்கி வருகிறார்.
இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கையில் நடக்கும் யூத் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார் அர்ஜூன்.
சச்சினின் நீண்ட கால நண்பரும், நீண்டகாலம் இணைந்து விளையாடியவருமான ராகுல் டிராவிடன் மகனும் கிரி்ககெட்டில் கலக்கி வருகிறார். 12 வயதாகும் சமித், 14 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் மல்லையா அதிதி பள்ளிக்காக விளையாடினார். ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்ததுடன், 9 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
இந்தாண்டு ஜனவரியில் நடந்த 14 வயதுக்குட்பட்டோருக்கான பிடிடிபிள்யூ கோப்பை போட்டியில் சதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். அப்போதே டிராவிட் மகனின் திறமை பாராட்டப்பட்டது. 2015ல் 12 வயதுக்குட்பட்டோர் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் விருதையும் வென்றுள்ளார்.