கோலாலம்பூர்: நேபாளத்தில் நடக்கும், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை போட்டியில், கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது. இந்திய அணியின் கோச் ராகுல் டிராவிட், நேராக சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நேபாள அணி மற்றும் உலக ரசிகர்களின் பாராட்டை வென்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர்' என்று போறப்படும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், 19 வயதுக்குட்பட்டோர் அணிக்கான கோச்சாக உள்ளார். இந்த அணி, தற்போது, மலேசியாவில் நடக்கும் ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்று வருகிறது.
நடப்பு சாம்பியனான இந்தியா, நேபாள கிரிக்கெட் அணியுடன் மோதியது. நேபாளம், எட்டு விக்கெட் இழப்புக்கு, 185 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா, 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம்,19 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் வென்றது.
கிரிக்கெட்டில், எந்த வயதுப் பிரிவிலும், இந்தியாவை நேபாளம் இதுவரை வென்றதில்லை. நேபாள வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருந்தபோது, இந்திய அணியின் கோச் ராகுல் டிராவிட் நேராக அங்கு சென்று, அவர்களுடைய கோச் பினோத் குமார் தாசுக்கு வாழ்த்து கூறினார்.
திராவிடின் இந்த நடவடிக்கை தற்போது பலராலும் பாராட்டப்படுகிறது.
"டிராவிட் மிகவும் எளிமையானவர். உங்கள் அணி சிறப்பாக விளையாடியது, இந்த வெற்றிக்கு உகந்தவர்கள் நீங்கள் என்று அவர் பாராட்டினார். வெற்றியைவிட, இந்தப் பாராட்டு எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது" என்கிறார் தாஸ்.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து, நேபாளம் மற்றும் இந்தியா, இரண்டு போட்டிகளில் விளையாடி, தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. முந்தைய ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்த நோபாளம், அடுத்ததாக மலேசியாவை சந்திக்கிறது. முதல் ஆட்டத்தில் மலேசியாவை வென்ற இந்தியா, அடுத்ததாக வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.