ஆக்ரோஷம்
அணி வீரர்களின் ஆக்ரோஷம் என்பது வெற்றியை ஈட்டித்தரும் ஒரு சிறு பங்கு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மிதமிஞ்சிய ஆக்ரோஷம் ஆபத்தானது என்பதையும் மறுக்க முடியாது. சரி.. தலைப்புக்கு வருகிறேன்.. மேற்கண்ட ஆக்ரோஷம் அனைத்துக்கும் விதிவிலக்கானவர் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. களத்தில் இடியே விழுந்தாலும் எந்த ஒரு உணர்ச்சியையும், ஆக்ரோஷத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ள மாட்டார் தோனி.
Recommended Video
மிஸ்டர் கூல்
இந்திய அணியில் இருக்கும்போதும் சரி, சி.எஸ்.கே.விலும் சரி, படுதோல்வியிலும், கொத்து, கொத்தாக விக்கெட்கள் சரியும்போதும், வீரர்கள் கேட்ச் டிராப் பண்ணும்போதும், பீல்டிங் மிஸ் பண்ணும்போதும் என எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். வெற்றியிலும் ஒரே முகம், தோல்வியிலும் ஒரே முகம்தான். கடினமான சூழ்நிலையிலும் பதட்டப்படாமல், உணர்ச்சி வசப்படாமல் சரியான முடிவுகளை எடுப்பதுதான் தோனியின் மிகப்பெரிய பலமே. இதனால்தான் ரசிகர்கள் அவருக்கு 'மிஸ்டர் கூல்' என்ற ஒரு பட்டத்தையே சூட்டி இருக்கிறார்கள்.
அரிதாகத்தான் நடக்கும்
தோனி களத்தில் கோபம் கொள்வது, உணர்ச்சிவசப்படுவது என்பது எப்போவாவது அரிதாகத்தான் நடக்கும். இப்படி ஒரு அரிய நிகழ்வைத்தான் நேற்று சென்னை ரசிகர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சென்னை அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி மும்பை பேட்டிங் செய்கிறது. 18-வது ஓவரை தீபக் சாஹர் வீசுகிறார். வெற்றிக்கு 15 பந்துகளில் 42 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், தீபக் சாஹர் வீசிய பந்தை 'ஸ்கூப் 'ஷாட் அடிக்க முயன்றார் மும்பை வீரர் சவுரப் திவாரி.
கேட்ச் டிராப்
ஆனால் பேட்டில் பந்து சரியாக கனெக்ட் ஆகாததால் பேட்டின் விளிம்பில்(edge) பட்டு ஷாட் பைன் லெக்(short fine leg) திசையில் வானம் நோக்கி சென்று மீண்டும் கீழே வருகிறது. ஸ்டெம்புக்கு மிக அருகில் என்பதால் பந்தை பிடிக்க ஓடுகிறார் விக்கெட் கீப்பர் தோனி. அதே வேளையில் பந்தை பிடிப்பதில் அங்கு தயாராக இருக்கிறார் டுவைன் பிராவோ. கடைசியில் யார் பந்தை பிடிப்பது என்பதில் இருவருக்கும் குழப்பம் ஏற்பட, தோனி சரியாக பந்தை பிடிக்காததால் அது கிளவுஸ்சை ஏமாற்றி கீழே விழுகிறது. கேட்ச் டிராப் ஆகிறது.
தோனி கோபம்
இதனால் அதிருப்தி அடைந்த தோனி, சற்று கோபத்துடன் பிராவோவை பார்த்து என்ன இது? என்பது போல் சைகை காட்டுகிறார். ஏதோ கோபமாக பேசுகிறார். இந்த சிறு கோபம் தோனி தரப்பிடம் அரிதான விஷயம் என்பதால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதையே மும்பை ரசிகர்கள் மீம்ஸ்களால் போட்டு கலாய்க்க, சி.எஸ்.கே ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர். கேட்ச் டிராப் ஆன விஷயத்தில் தோனி, பிராவோ என இரண்டு பேரிடமும் தவறு உள்ளது.
தவறு யார் பக்கம்?
ஏனெனில் தோனி 'நான் பிடிக்கிறேன்' என்பதுபோல் சைகை செய்து பந்தை பிடிக்க வருகிறார். இதை அறிந்து பிராவோ அங்கு இருந்து முழுமையாக ஒதுங்கி இருக்கலாம். தோனி பக்கம் பார்த்தால், அவர் கேட்ச் பிடிக்க முயலும்போது பிராவோ அந்த அளவுக்கு நெருக்கமாக இல்லை என்பது தெரிகிறது. தோனி கிளவுஸ் வேறு அணிந்து இருப்பதால் பந்தை பிடித்து இருக்கலாம். ஆனால் மேட்ச் முடிந்தவுடன், இவையெல்லாம் ஏதும் நடக்காதுபோல் பிரோவாவும், தோனியும் சகஜமாக பேசிக் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.